Skip to main content

கட்டண வசூலை நன்கொடையாகக்காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடும் ஈஷா ஃபவுண்டேஷன்!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

Isha Foundation engages in tax evasion by donating fees!

 

 

கோவையில் இயங்கிவரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின்மீது, மலைப்பகுதிகளை சட்டத்துக்குப் புறம்பாக வளைத்து கட்டிடங்களைக் கட்டியது, யானையின் வழித்தடங்களை மறித்து, கட்டிடங்களையும், சுற்றுச்சுவர்களையும் கட்டியது உட்படப் பல்வேறு வழக்குகள், விவகாரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, இந்த ஈஷா நிறுவனம் குவிக்கும் கோடிக்கணக்கான வருமானத்தில் நடத்திவரும் வரி ஏய்ப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.

 

இந்நிறுவனத்தின் வரி ஏய்ப்பின் அடிப்படை சூத்திரம், அனைத்து வியாபாரத்திலிருந்தும் பெறப்படும் தொகையை நன்கொடை ரசீதாகக் கணக்கில் காட்டி வரிச்சலுகை பெறுவதாகும். கடந்த 2018ம் ஆண்டில் 56.43 கோடி ரூபாயை வருமானமாகக் காட்டியுள்ள ஈஷா ஃபவுண்டேஷன், தனது வருமானத்தில் 35.81 கோடி ரூபாயை அன்பளிப்பு என்ற வகையில் கணக்கில் காட்டியுள்ளது. இப்படி அன்பளிப்பாகக் காட்டப்பட்டுள்ள தொகைக்கு இந்திய வருமான வரிச்சட்டம் 80G பிரிவின்படி வரிவிலக்கு பெற்றுள்ளது. இந்த வருமான வரிப்பிரிவானது, 'எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நலனையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் சலுகை பெறக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளது. அதற்காகத்தான் இந்நிறுவனத்தை இந்து மதத்தோடு தொடர்புபடுத்தாதபடி, சிவனையே, ஆதி யோகி என்ற புதுப்பெயரில் மாற்றிவிட்டார் போலும்!

 

இந்த ஈஷா யோகா நிறுவனத்தின் சார்பாக, யோகா, மாதாந்திர, வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சிகள், ஆன்மீகப்பயணம், மரக்கன்று நடும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு கட்டண முறைகள் இருக்கின்றன. ஜக்கி வாசுதேவின் விளம்பரங்கள், பாப்புலாரிட்டிக்கு மயங்கி, உள்நாடு, வெளிநாடு என உலகம் முழுவதுமிருந்தும் பலரும் இந்நிறுவனத்தோடு இணைந்து பணத்தை ஆயிரங்களில், லட்சங்களில், கோடிகளில் கொட்டுகிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை. சிலவற்றுக்கு இவர்களாகவே ஒரு தொகையை எழுதி, நன்கொடையாகக் கணக்கில் காட்டுகிறார்கள். ஜக்கியின் பக்தர்களாக இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமாகத் தோணுவதில்லை. ஆனால், சிலர் மட்டும் இதில் நடக்கும் மோசடிகளைப் புரிந்துகொண்டு கேள்வியெழுப்புவது, வழக்கு தொடுப்பதென, இங்கே நடைபெறும் மோசடிகளை வெளியுலகுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

 

jaki

 

‘காவேரி கூக்குரல்’  என்ற பெயரில் காவிரி ஆற்றுப்படுகையில் 242 கோடி மரங்களை நடப்போவதாக ஒரு பிரச்சாரத்தை ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்தது நினைவிருக்கிறதா? உண்மையிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரக்கன்று நடுபவர்கள், சத்தமில்லாமல் அந்த சேவையைச் செய்துவருகிறார்கள். ஆனால், இந்த ஜக்கி போன்ற கார்ப்பரேட்டுகள் இதை மிகப்பெரிய பிசினஸாகப் பார்க்கிறார்கள். "கர்நாடகாவிலுள்ள தலைக்காவேரியிலிருந்து தமிழ்நாட்டின் திருவாரூர் வரை  மொத்தம் 639 கிமீ தூரத்துக்கு, காவிரி நதிப்படுகையில் 242 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். இத்திட்டத்தை விவசாயிகளே பங்கெடுத்து செயல்படுத்த வேண்டும். அதற்கான மரக்கன்றுகளை ஈஷா ஃபவுண்டேஷனில் கன்று ஒன்றுக்கு 42 ரூபாய் விலைக்கு வாங்கலாம்" என்று ஒரு திட்டத்தை பிரபலங்களின் துணையோடு விளம்பரப்படுத்தினார். இதில் நடப்படும் மரங்களின் விளைச்சலிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் இணைத்து வியாபாரம் செய்யும் உத்தியையும் குறிப்பிட்டார். அதன்படி, இது மறைமுகமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வணிக முயற்சியென்பதை விவரமானவர்கள் மட்டும் புரிந்துகொள்ள, மற்றவர்கள், பசுமைப்புரட்சியாக நம்பி, மரக்கன்றுகளை ஈஷா ஃபவுண்டேஷன் மூலம் வாங்குவதற்கு பணம் செலுத்தினார்கள்.

 

Isha Foundation engages in tax evasion by donating fees!

திண்டுக்கல்லைச் சேர்ந்த இயற்கை விவசாயியான நாகப்பன் கௌதம் என்பவர், "மதுரையிலுள்ள ஈஷா மையத்திலிருந்து 8,000 ரூபாய்க்கு ஒரு முறையும், தலா 3,000 ரூபாய்க்கு இருமுறையும் மரக்கன்றுகளை வாங்கினேன். ஆனால், அதற்கு ஈஷா மையத்திலிருந்து எவ்வித ரசீதும் தரப்படவில்லை. அவரும் கேட்கவில்லை. அடுத்த 4 மாதங்கழித்து, ஈஷா மையத்திற்கு நாகப்பன் கௌதம் 1,242 ரூபாய் நன்கொடை அளித்ததாக ஒரு ரசீதை ஈஷா மையம் அனுப்பியிருக்கிறது. முழுக்க முழுக்க வணிகமாகச் செலுத்திய தொகையில் சிறு பகுதியை மட்டும் நன்கொடியாகக் காட்டி, வரிச்சலுகைக்கு முயன்றிருப்பது மிகப்பெரிய மோசடியாகும். ஒருபக்கம் வரிச்சலுகைக்கு சிறு தொகையைக் காட்டுவதோடு, பெரும்தொகையைக் கணக்கிலேயே காட்டாமல் மறைக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார். இந்த 'காவேரி கூக்குரல்' திட்டத்தின் மூலம் காவிரிப் படுகையில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாத் என்பவர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

2014ம் ஆண்டில், யோகா வகுப்பில் சேர்வதற்கான மோசடியால் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப்பெண் ஜெயா பாலு ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர், கோவையிலுள்ள ஈஷாவில் யந்திரா நிகழ்ச்சியில் யோகா வகுப்பில் கலந்துகொள்வதற்காக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியிருக்கிறார். அந்த கட்டணத்துக்கு ரசீது தராமல், நன்கொடையாகக் கணக்கில் காட்டி ரசீது அனுப்பியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், யோகா வகுப்புகளில் கலந்துகொள்வதற்கும், அப்போது தரப்படும் ஒரு மந்திரித்த கல்லுக்கும் சேர்த்துதான் 4.5 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னர், அந்த கல்லுக்கு மட்டுமே தனியாக 1.5 லட்சம் ரூபாய் கட்டினால்தான் கொரியரில் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Isha Foundation engages in tax evasion by donating fees!

 

கட்டணம் என வசூலித்துவிட்டு, அதனை நன்கொடை என்று கணக்கில் காட்டுவது, கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் கேட்பதென, ஈஷா மையத்தின் மோசடிகளால் மனம் வெதும்பி, தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஆனால் ஈஷா தரப்பில் அதற்கு மறுத்திருக்கிறார்கள். அதன்பின்னர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அப்பணத்தை மீட்டிருக்கிறார் ஜெயா பாலு. 

 

இந்த ஈஷா ஃபவுண்டேஷன், ஆன்மீகச் சுற்றுலா என்ற பெயரில் கைலாஷ் மானசரோவருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கான கட்டணமாக 2,75,000 ரூபாயிலிருந்து, 50 லட்சம் ரூபாய்வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 50 லட்ச ரூபாய் கட்டணத்தில் சுற்றுலா செல்பவர்கள், ஜக்கி வாசுதேவுடன் இணைந்தே பயணிக்கலாம். இப்படியான பயணத்திட்டங்களின் மூலமாகவே ஆண்டுக்கு சுமார் 60 கோடிவரை இந்த ஃபவுண்டேஷனுக்கு வருமானம் வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

 

முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஆச்சிமுத்து சங்கர், இஷா ஃபவுண்டேஷனின் வரி ஏய்ப்பு மோசடி குறித்து 2018ம் ஆண்டில் மாநில வருமான வரித்துறை ஆணையரிடம் புகாரளித்திருந்திருக்கிறார். பல்வேறு ஆன்மீக வியாபாரக் கட்டணங்களையும் நன்கொடைக்கணக்கில் காட்டுவதை புகாரில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரே நேரடியாகவும் அந்த ஃபவுண்டேஷனில் அனுபவப்பட்டிருக்கிறார். இவர் சேர்ந்த ஒரு வார யோகா வகுப்புக்கான கட்டணத்தையும் நன்கொடையாகவே ரசீது கொடுத்திருக்கிறார்கள். ஒரு வார வகுப்பின் இறுதி நாளில், பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்வதற்காகக் கடை விரித்திருக்கிறார்கள். 

 

இப்படி ஈஷா ஃபவுண்டெஷன், ஆன்மீகத்துடன், வணிக நோக்கையும் சேர்த்தே செயல்படுகிறது. அந்த மையத்தின் சார்பில் நடத்தப்படும் நவராத்திரி நிகழ்ச்சியே இதற்கு சாட்சி என்கிறார் இவர்.

 

இப்படி தொடர்ச்சியாக வரி ஏய்ப்பில் ஈடுபடும் ஜக்கி வாசுதேவ், தனது அரசியல் செல்வாக்கைக் காட்டித்தான் அனைத்தையும் சரிக்கட்டிவருகிறார். அவ்வப்போது, காவேரி கூக்குரல், நதிகளை மீட்போம், கோவில் அடிமை நிறுத்து என்று பல்வேறு விளம்பர ப்ராஜெக்ட்களையும், கோஷங்களையும் எழுப்புவதன்மூலம், சமூக சேவகராகவும், தேச பக்தராகவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார். ஈஷா ஃபவுண்டேஷனின் வரி ஏய்ப்பு மோசடி, அனைவருக்கும் தெரியவரும்போதுதான் அவர்மீதான போலி பிம்பங்கள் உடையும்.

       

                                                                                                                                 தெ.சு.கவுதமன்


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

வேலுமணிக்காக வரும் ஈஷா! அ.தி.மு.க.வில் அடுத்த பிளவு?

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

SP Velumani to break ADMK ?

 

‘என்றென்றும் அ.தி.மு.க.காரன்’ என சனிக்கிழமையன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. இனிமேல் பா.ஜ.க.வுடன் எவ்வித கூட்டணியும் கிடையாது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, அதற்கடுத்து வரவிருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அறிவித்தது. இதனையடுத்து வேலுமணிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல், உரசல் என செய்திகள் சிறகடித்துப் பறந்தது. இந்த நிலையில், வேலுமணியின் எக்ஸ் தளப்பதிவு எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டவே எனவும், இதன் பின்னணியில் ஈஷாவின் ஜக்கி வாசுதேவ் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

 

ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோவை KMCH-ல் பாராட்டுவிழா நடந்தது. வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் வானதி சீனிவாசனைப் பார்த்து, “வானதி.! முன்னாள் அமைச்சர் வேலுமணியைப் பார்த்துக்கொள். எந்த சூழலிலும் அவரை கைவிடக்கூடாது” என அனைவரின் முன்னிலையில் நேரடியாகப் பேசினார் சி.பி. ராதாகிருஷ்ணன். அந்தளவிற்கு பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள் வேலுமணி மீது அக்கறை வைத்துள்ளார்கள்.

 

SP Velumani to break ADMK ?

 

ஹைகோர்ட்டாவது, ...வது என்று கூறிய ஹெச். ராசாவை கைது செய்யவிடாமல் பார்த்துக்கொண்டது, வானதியின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டது என பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள் இன்றுவரை வேலுமணி புராணம் பாடிக்கொண்டிருக்கின்றார்கள். இங்குதான் இப்படியென்றால் அமித்ஷாவுடன் அவருடைய உறவு உலகம் அறிந்ததே. அண்ணாமலை வருகைக்கு முன்பே அமித்ஷாவுடன் நெருங்கி மத்திய அரசின் நீட் தேர்வு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. எட்டுவழிச் சாலை சட்டங்களுக்கு அனுமதியளித்து ஒன்றிய அரசிற்கு முட்டுக்கொடுத்தது வேலுமணியே. அதுபோல் வேலுமணியின் சொத்துக் குவிப்பு மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்படி ஒன்றிய அரசுடன் ‘முஸ்தபா... முஸ்தபா...’ ரேஞ்சில் பின்னிப் பிணைந்து வருபவர் வேலுமணி.

 

இப்படியிருக்க, அடுத்த முதல்வர் யார்.? எனும் பிரச்சனைக்காக பா.ஜ.க. வுடனான உறவை முறித்ததில் துளியும் உடன்பாடில்லை வேலுமணிக்கு. அறிவிப்பு வந்த நாளிலிருந்து அமைதியாக இருந்தவர் இப்பொழுது ‘என்றென்றும் அ.தி.மு.க.காரன்’ எனும் பதிவைப் போட்டிருக்கின்றார். இது புரிந்தவர்களுக்குப் புரியும்” என்கிறார் மேற்கு மண்டலத்திலுள்ள அ.தி.மு.க. முன்னாள் மா.செ. ஒருவர்.

 

2021 சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் 21 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் வேலுமணி. தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மண்ணைக் கவ்விய நிலையில் தான் பொறுப்பேற்ற 21 சட்டமன்றத் தொகுதிகளில் 17-ஐ கைப்பற்றி அ.தி.மு.க.வில் அசைக்கமுடியாத சக்தியானார். இது இப்படியிருக்க, தற்பொழுதுள்ள அ.தி.மு.க. கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 32க்கும் அதிகமானோர் வேலுமணியின் தயவால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

 

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி, “எடப்பாடி பழனிச்சாமி மீது வேலுமணி கடுமையான கோபத்தில் இருப்பது உண்மை. அதற்காக பா.ஜ.க.விற்கோ ஏனைய கட்சிகளுக்கோ எந்நாளும் போகமாட்டார். அதுபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டேவாகவும் இருக்கமாட்டார். நான் அ.தி.மு.க. கட்சிக்காரன். நான் எதற்கு வெளியே போகணும், கட்சியை உடைக்கணும். துரோகியாக மாறனும் என்பது அவருடைய வாதம். இருப்பினும் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ.க் களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர்களும், மா.செ.க்களும் என் பக்கமே இருக்கின்றார்கள் என்பதை கோடிட்டுக் காட்டவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்பட எவ்வித முடிவையும் நான் எடுப்பேன் என்பதை அறிவிக்கவுமே இந்த எக்ஸ் தளப்பதிவு. இதன் பின்னணியில் ஜக்கி வாசுதேவ் மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நண்பர்களான கிரண் விஸ்வநாத், சிவக்குமார் ஆகியோர் இருக்கின்றனர். விரைவில் அ.தி.மு.க. வேலுமணி வசம் வருவதை யாராலும் தடுக்கமுடியாது” என்கிறார் அவர்.

 

இந்த பரபரப்பு சூழலில், இல்ல விழா ஒன்றிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் கட்சிக்காரர்களை தேடித் தேடி வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மற்றும் செந்தில் அழைப்பிதழ்களை வைத்து வருகின்றனர். அழைப்பிதழ் வைக்கும் போதே யார் யாரெல்லாம் வேலுமணிக்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்கிற தகவல்களை ரகசியமாகத் திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

SP Velumani to break ADMK ?

 

இதேவேளையில், மதுரை மாவட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை தினசரி சந்தித்தாலும், கூட்டணி முறிவுபற்றி தற்பொழுது வரை வாய் திறக்கவில்லை. இதேநிலை தான் ஏனைய இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் உள்ளது. எப்படியாகினும் எடப்பாடி பழனிச்சாமி நம்மைத் தேடுவார் என்ற நிலையில், அவரை தவிர்க்கவே எஸ்கேப்பாகியுள்ளனர். ஒற்றைத் தலைமை வேண்டுமென கர்ஜித்த மதுரை புறநகர் கிழக்கு மா.செ.வான ராஜன் செல்லப்பாவும், மதுரை மாநகர மா.செ.வான செல்லூர் ராஜுவும். என்னைக் காப்பாற்றியது வேலுமணியே என ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்த ராஜேந்திரபாலாஜியும் பா.ஜ.க. கூட்டணி முறிவிற்கு எதிராக இருப்பது எடப்பாடியை உறுத்தியுள்ளது.

 

"வேலுமணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில்தான் வருகின்றது ஈஷாவும், காருண்யாவும். ஊழல் செய்து வேலுமணி சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதி ஈஷாவிடம்தான் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலின் பொழுது கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஈஷாவிடமிருந்து தான் பணம் போனது. குறிப்பாக, வானதி சீனிவாசன் போட்டியிட்டு வென்ற கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு "ஈஷா' என முத்திரையிடப்பட்ட கவரில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். பதிலுக்கு ஈஷாவில் நடைபெறும் எவ்வித மர்ம மரணங்களையும் வேலுமணி கண்டுகொள்வதில்லை. மாறாக, காருண்யாவிற்கு எதிராக சில அமைப்புகளை தூண்டிவிட்டு "நொய்யல் ஆற்றை சுத்தம் செய்வோம்.! நீர் நிலைகளை மீட்போம்' என போராட்ட வடிவத்தை உருவாக்கி ஜக்கி வாசுதேவினை சந்தோஷப்படுத்துவது வேலுமணியின் அன்றாட வேலை. வேலுமணியின் பணம் ஈஷா மூலமாக வெளியேறி கோவையில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான அரவக்குறிச்சி சிவக்குமாரின் சிவா இண்டஸ்ட்ரீஸ், சிவா கன்ஸ்ட்ரக்‌ஷனிலும், மற்றொரு நண்பரான கர்நாடகா கிரண் விஸ்வநாத்திடமும் சென்றடைந்து தொழில் முதலீடாக மாறியுள்ளது. ஜாம்பியாவில் செயல்பட்டு வரும் நிலக்கரிச் சுரங்கமே அதற்கு சாட்சி.! அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் பொழுது ஈஷா மையப் பொறுப்பாளர் தினேஷும், கிரண் விஸ்வநாத்தும் அண்ணாமலைக்காக நேரடியாகக் களப் பணியாற்றியது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணியை மோதவிடுகின்றனர் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி மற்றும் அண்ணாமலை டீம்” என்கிறார் வேலுமணியின் நெருங்கிய நண்பர் ஒருவர்.

 

SP Velumani to break ADMK ?

 

இதேவேளையில், “எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு தற்கொலைக்கு சமம். நமக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தாலும் ஜெயக்குமாரை வைத்து கூட்டணியில் பிளவை ஏற்படுத்துகிறார். பெயருக்காக மா.செ. கூட்டத்தினை கூட்டிவிட்டு, முன்பே அவர் எடுத்த முடிவை செயல்படுத்துகிறார். தன்னிச்சையான அவரது முடிவு நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, அடுத்து நாம்தான் ஆட்சி அமைப்போம். அதற்கான சூழல் நன்றாகத் தெரியும் நிலையில் நமக்கு பலமாக இருக்கும் ஒன்றிய அரசின் ஆதரவு தேவை. இப்படியிருந்தால் என்னாவது..? தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை தற்பொழுது வரை எடப்பாடி பழனிச்சாமியை யாரும் ஏற்கவில்லை. கட்சியை உடைக்க வேலுமணி துரோகி அல்ல. நமக்கு தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெ.வுமே. இருக்கின்ற எம்.எல்.ஏ.க்களை, மா.செ., நிர்வாகிகளை வைத்து தனியாகச் செயல்படுவோம். பா.ஜ.க. கூட்டணியிலேயே தொடர்வோம். உள்ளது உள்ளபடியே இப்பொழுது இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கே வரும் தேர்தலில் சீட். அனைத்து செலவுகளையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் செய்வது வேலுமணிக்கான ஆதரவைத் தருவது மட்டுமே என ஒவ்வொருவரிடமும் வேலுமணிக்காக கேன் வாஸ் செய்துவருகின்றனர் ஈஷா தரப்பினர்” என்கிறது உளவுப் பிரிவு.

 

ஈஷாவின் செயலால் அதிர்ச்சியிலிருக்கிறார் எடப்பாடி.