Skip to main content

'இருட்டுக்கடை அல்வா' உரிமையாளர் தற்கொலை!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

iruttu kadai halwa owner incident in nellai district

 

நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வரும் நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (25/06/2020) தற்கொலை செய்து கொண்டார். கரோனா தொற்றின் தனிமையினாலே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றது மாவட்ட நிர்வாகம்.

 

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் கீழ ரத வீதியில் நூற்றாண்டுக்ளைக் கடந்து இயங்கி வருகின்றது உலகம் முழுவதும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா. இனிப்பில் அல்வாவிற்கென்றே தனிப்பட்ட அடையாளமாய் மாறிய இருட்டுக்கடை அல்வாவின் உரிமையாளர் ஹரி சிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. 

 

iruttu kadai halwa owner incident in nellai district

 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்த அவருக்கு, மருத்துவர் அறிவுரையின் பேரில் கோவிட்- 19 வைரஸ் தொற்று உள்ளதா..? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கும் அவரது மருமகன் கோபால் சிங் என்பவருக்கும் கரோனா வைரஸ் கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் பெருமாள்புரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையின் தனியறையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில், இன்று (25/06/2020) தனியறையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் ஹரி சிங்கிற்கு சிகிச்சையளிப்பதற்காகச் செவிலியர்கள் தனியறைக்குச் சென்றிருந்த பொழுது அவர் அந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் முறைப்படி காவல்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறந்தவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கடையில் விற்பனையைக் கவனித்து வந்ததால் அதுகுறித்தும் காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

 

iruttu kadai halwa owner incident in nellai district

 

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட ஹரி சிங்கின் வீடு இருக்கும் திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெரு, அல்வாக்கடை உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினிகளைத் தெளித்து, தடுப்புகளை ஏற்படுத்தி அப்பகுதியினை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. பிரசித்திப் பெற்ற அல்வா கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநெல்வேலி மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.