தெலுங்கு திரையுலகில் பிரபலம் வாய்ந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 80 வயதான கிருஷ்ணா இதுவரை 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையாவார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கிருஷ்ணா காலமானார்.
ஏற்கனவே நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், அதேபோல அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் உயிரிழப்பால் தெலுங்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.
பல்வேறு பிரபலங்களும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு வேதனை அளிக்கிறது. கிருஷ்ணாவை இழந்து வாடும் மகேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நடிகர் கிருஷ்ணாவின் மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு' எனத் தெரிவித்துள்ளார்.