Irregularity in poverty line list; People besieged the union office

Advertisment

சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் கடவாச்சேரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்பவர்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். இம்மக்களை வறுமைக்கோடு பட்டியல் கணக்கெடுப்பில் சேர்க்காமல் நிலம் வைத்துள்ளவர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்டவர்களை இதில் இணைத்துள்ளனர். வறுமையில் இருக்கும் இம்மக்களுக்கு 100 நாள் வேலை உள்ளிட்ட அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜிடம் இது குறித்து மனு அளித்தனர்.

இதனையறிந்த மகளிர் மேம்பாட்டுத்திட்ட அலுவலர் திருமாவளவன், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். ஆகஸ்ட் 15க்குள் மறு கணக்கெடுப்பு நடத்தி ஊராட்சி மன்ற நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றிட உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். இதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisment

இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குமராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முனுசாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரேவதி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.