தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, மாநில உள்துறை கூடுதல் முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி, புதன்கிழமையன்று (ஜூன் 26, 2019) உத்தரவிட்டுள்ளார். இவர்களில் சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் உள்பட 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது.

i

Advertisment

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்தும், பலருக்கு பதவி உயர்வு வழங்கியும் உள்துறை உத்தரவிட்டுள்ளது.

d

Advertisment

அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரக காவல்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த செந்தில்குமார், ஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரை சேலம் சரகத்தில் இருந்து சேலம் மாநகர காவல்துறை ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த சங்கர், சென்னை சிபிசிஐடி பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல், மதுரை சரக டிஐஜி ஆக பணியாற்றி வரும் பிரதீப்குமார், சேலம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டு உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள் புதிய பணியிடங்களில் பொறுப்பேற்பார்கள் எனத்தெரிகிறது.