Advertisment

ஐபிஎல் கிரிக்கெட்டும் அதிமுகவும் ஒன்றுதான்! -விருதுநகர் மாவட்ட பிரச்சாரத்தில் உதயநிதி கிண்டல்!  

IPL cricket and AIADMK are one and the same! - Udayanidhi joke in Virudhunagar district campaign!

Advertisment

இந்தியா கூட்டணி சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை மற்றும் திருமங்கலம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தனது பிரச்சார உரையில் “உங்களுடைய எழுச்சியையும் ஆர்வத்தையும் பார்க்கும்போது, கை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை பெருவாரியாக வெற்றிபெற வைத்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் அழகர்சாமியைவிட ஒரு லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். அதேபோல், 2021 சட்டமன்றத் தேர்தலில் 95000 வாக்குகள் வித்தியாசத்தில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனை வெற்றிபெற வைத்தீர்கள். இந்தத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலின் தலைப்பே மாநில உரிமைகளை மீட்கும் தலைவரின் குரல்.

அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்துவிட்டார்கள். ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கைச் சட்டம் கொண்டுவந்தது. இப்போது பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவன், இந்தத் திட்டம் வந்தால், எட்டாம் வகுப்பிற்கு மட்டுமல்ல, ஐந்தாம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலை ஏற்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு வரியாக ரூபாய் ஆறரை லட்சம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வெறும் ஒன்றை லட்சம் கோடி ரூபாயை நமக்குத் திருப்பிக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கொடுத்தால், நமக்கு அவர்கள் திருப்பிக் கொடுப்பது 28 பைசா மட்டும்தான். இனிமேல் மோடியின் பெயரை 28 பைசா பிரதமர் என்றே நீங்கள் கூற வேண்டும்.

Advertisment

கடந்த பத்து வருடங்களில், ஒன்றிய பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தார்? வெறும் தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே வரும் அவர், 2014ல் வந்தார். வந்தவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். வைத்தது ஒரு கல். அந்தக் கல்லையும் நான் எடுத்துட்டு வந்துட்டேன். இப்போது கடைசியாக 10 நாட்களில், தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் தேர்தல் வந்துவிட்டது. ஒன்றிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், புயல் பாதிப்பின் போது வந்திருக்க வேண்டும். வந்தாரா? தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணம் கேட்கப்பட்டது, கொடுத்தாரா? தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தைத்தான் நான் கேட்கிறேன். உங்கள் அப்பன் வீட்டுப் பணத்தை நாங்கள் கேட்கவில்லை என்று கூறினேன். அதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி, எனக்குப் பாடம் எடுத்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நம் தலைவர் ரூ.6000, ரூ.1000 என பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கினார். கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது, நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து சென்னையில் ஜெகதீசன் வரை 21 குழந்தைகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். அடுத்த நாளே ஜெகதீசனின் தந்தை செல்வசேகரனும் தற்கொலை செய்துகொண்டார். ஒரு குடும்பத்தையே இந்த நீட் தேர்வால் இழந்துள்ளோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை நிச்சயமாக ரத்து செய்வோம் எனத் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளோம். சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும். கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் ஆக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளோம். பெட்ரோல் விலை 75 ரூபாயும் டீசல் விலை 65 ரூபாயும் குறைக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளோம். இதையெல்லாம் நிச்சயமாக நம் தலைவர் செய்து காட்டுவார். கலைஞர் கூறுவதுபோல் சொல்வதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என்பதில் தலைவர் உறுதியாக இருக்கிறார்.

கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர்தான். சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.கட்டணம் இல்லாப் பேருந்தின் மூலம் 483 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும், தேர்தல் முடிந்தபிறகு , அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

சிஏஜி அமைப்பு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடும். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ரூபாய் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. துவாரகா சாலைத் திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் பாடம் புகட்ட, வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை கை சின்னத்தில் இடவேண்டும்.

அடுத்த 23 நாட்கள் இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாகச் சென்று நீங்கள்தான் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். இப்போது ஐபிஎல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. இதில் பல்வேறு அணிகள் உள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டும் அதிமுகவும் ஒன்றுதான். ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி, மோடி அணி, ஜெ.தீபா அணி இப்படி பல அணிகள் உள்ளன. இவர்களுக்கு பாடம் புகட்ட, ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். கலைஞரின் இந்த நூற்றாண்டு விழாவில், அவருக்குத் தேர்தல் வெற்றியைப் பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம்.” எனப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe