சேலத்தில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வின் ஸ்டார் சிவக்குமார் மீது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜூன் 13 ஆம் தேதி, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், இ.கம்யூ., மாவட்டச் செயலாளர் மோகன் ஆகியோர் தலைமையில் வந்திருந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனு விவரம்: சேலம் வின் ஸ்டார் இந்தியா நிறுவன உரிமையாளர் சிவக்குமார் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களில் 3500க்கும் மேற்பட்டோர் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இதில் 1700 பேர் அளித்த புகாரின் பேரில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.
அவர், முதலீட்டாளர்களுக்கு ஓராண்டிற்குள் பணத்தைத் திருப்பி அளித்து விடுவதாகக் கூறினார். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி அளித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், இதுவரை மோசடி செய்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. அந்த வழக்கும் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது. அதனால் சிவக்குமாரை கைது செய்ய வேண்டும். அவர் ஏமாற்றிய தொகையை சமரச தீர்வு மையத்தின் மூலம் பெற்று பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தனர்.