தமிழ்நாடு அரசு நான்கு நாட்கள் தீவிர ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில், அந்நாட்களில் காணொளி மூலமாக கீழமை நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் வருகிற மே 3-ஆம் தேதிவரை, மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காலத்தில், காணொளி மூலமாக உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள், வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் ஏழு மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனது சுற்றறிக்கையில், ‘கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 தொடங்கி 28-ஆம் தேதி வரையும், தீவிர ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தீவிர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நான்கு நாட்களில், கீழமை நீதிமன்றங்கள் வழக்குகளை காணொளி மூலமாக மட்டுமே விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற பணியாளர்ளும் உதவியாளர்களும் காணொளி கலந்தாய்வு, வாட்ஸ்-ஆப் மூலமாகவே பணியில் கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசின் உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.