
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறைஅதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு நேற்று இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை அமைச்சர் பொன்முடியும் அவரது மகன் கௌதம சிகாமணியும் ஒரே காரில் புறப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாகவே சென்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரையும் தனித்தனியாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் அமைச்சர் பொன்முடியையும், ஐந்தாவது மாடியில் கௌதம சிகாமணியையும் அமர வைத்து தனித்தனியாகத்துருவித் துருவி விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சட்ட விரோதப்பணப் பரிவர்த்தனை தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து 4 மணி நேரம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாரணை முடிந்து இருவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)