Skip to main content

மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் விசாரணை... கொடநாடு வழக்கில் அதிரடி!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

 Investigation with the help of translators ... Action in Kodanadu case!

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, சாட்சிகளிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

 

இந்த வழக்கில் 8வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, 9வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள மனோஜ் என்கிற சாமி ஆகியோர் நேற்று (22.09.2021) உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்கள் இருவரும் கோவில் பூசாரிகள் என்ற நிலையில், கொடநாடு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்த சில தடைகள் இருப்பதாகவும், அதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. சொன்னபடியே சில பூஜைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை வழக்கில் வாகனங்கள் மற்றும் ஆட்களை ஏற்பாடு செய்தது, அதேபோல் கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்கு ஒருநாள் முன்பு இருவரும் கோவை வந்துள்ளனர். கொடநாடு கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் 8வது எண் நுழைவு கேட்டில் இருந்த காவலாளி கிருஷ்ணதபாவை கட்டிப்போட்டுக் கண்காணித்த 4 பேரில் இவர்கள் இருவரும் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடமும் நேற்று சுமார்  10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்றும் மனோஜ் (எ) சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அதேபோல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள சதீஷ் மற்றும் 6வது இடத்தில் உள்ள பிஜின்குட்டி ஆகியோர் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளனர். மனோஜ் (எ) சாமி, சந்தோஷ் சாமி, சதீஷ், பிஜின்குட்டி ஆகியோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இந்த விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தக் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்த விசாரணையை தனிப்படை அதிரடியாக கையிலெடுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.