c

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ராதாகிருஷ்ணன் நகரில் வசிப்பவர் ரமேஷ். இவர் வேலூரில் உள்ள தனியார் பேருந்து கம்பெனியில் மேலாளராக பணியாற்றிவருகிறார். இவரது மகன் டிசோரமேஷ். இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஇ படித்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு அங்கிருந்து ஊருக்கு வந்துள்ளார். ஆகஸ்ட் 16ந்தேதி இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது டிசோவின் மொபைல்க்கு ஒரு போன் கால் வந்துள்ளது. போனில் பேசியவர்கள், வெளியே காத்திருக்கிறோம் வா என அழைத்துள்ளனர். பேசியபடியே வெளியே வந்துள்ளான்.

Advertisment

அப்படி வந்தவன் காரில் இருந்தவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்துள்ளான். திடீரென அவனை டி.என் 23 ஏ.கே.6929 என்கிற காரில் இழுத்து உள்ளே போட்டுக்கொண்டு கார் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளது. இதில் அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் டிசோவின் குடும்பத்தாரிடம் சொல்ல அவர்கள் விருதம்பட்டு காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 17ந்தேதி காலை ரமேஷ் மொபைல் எண்ணுக்கு அவரது மகன் டிசோவின் எண்ணில் இருந்து கால் வந்துள்ளது. அதில் உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தா என மிரட்டியுள்ளது. இதுப்பற்றி போலிஸாரிடம் தகவல் கூறினர். டிசோ மொபைல் எண்ணை ட்ராக் செய்தபோது, அது வேலூரை சுற்றியே காட்டியுள்ளது. மதியத்துக்கு பின் அது ஆந்திரா மாநிலம் சித்தூரை காட்டியுள்ளது.

Advertisment

கடத்தியது யார், எதனால் கடத்தினார்கள்?, பணம் தான் நோக்கம்மா அல்லது வேறு ஏதாவது காரணமா ?. அல்லது கடத்தல் நாடகமா என போலிஸார் 3 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 18ந்தேதி விடியற்காலை டிசோ.ரமேசை சத்துவாச்சாரியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றுள்ளது கடத்தல் கும்பல். இந்த தகவல் தெரிந்ததும் டிசோரமேஷ் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசோரமேசை விருதம்பட்டு போலிஸார் தங்களுடன் அழைத்து சென்று, கடத்தியவர்கள் எப்படி இருந்தார்கள், கடத்தி எங்கு எங்கு அழைத்து சென்றார்கள், என்ன சொன்னார்கள், எதனால் விடுவித்தார்கள், பணம் ஏதாவது கைமாறியதா?, என பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

டிசோ கடத்தப்பட்டதும் வேலூரில் உள்ள சில ரவுடி கும்பல்களை அழைத்து விசாரித்தது போலிஸ். அதில் ரவுடி ஜானி டீமும் இருந்தது. ரவுடி கும்பல்களை அழைத்து விசாரிக்க தொடங்கியபின்பே விடுவிப்பு நடந்துள்ளது. அப்படியாயின் இதில் இவர்கள் தொடர்பு ஏதாவது உள்ளதா எனவும் விசாரணை நடத்திவருகின்றது தனிப்படை போலிஸ்.