Skip to main content

தேர்தல் அன்பளிப்பை கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தவருக்கு மிரட்டல்...!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

சமீப காலங்களாக தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி, மது என அள்ளி வீசுகிறார்கள் வேட்பாளர்கள். இது எம்பி எம்எல்ஏ இடை தேர்தல்களில் ஆரம்பித்து உள்ளாட்சித் தேர்தல்களில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பதவியை பிடிக்க ஒவ்வொரு வேட்பாளரும் வீட்டுக்கு வீடு குத்துவிளக்கு, அகல்விளக்கு, சோப்பு, சில்வர் தட்டு, மூக்குத்தி, சேலை என விதவிதமான பரிசுப் பொருட்களை தாராளமாக வாரி வழங்கி வருகிறார்கள்.

 

Intimidation of person donated gifts to the temple

 



இதில் ஆண் வாக்காளர்களுக்கு மது பிரியாணி என தினசரி கவனிப்புகள் தனி வகை. இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வாக்காளருக்கும் 200 முதல் 500, 1000, 2000 என் ஓட்டுக்கு பணத்தையும் தாராளமாக வீசி வருகிறார்கள். மக்கள் மனநிலையும் அதற்கு ஏற்றவாறு மாறிவருகிறது. சில வேட்பாளர்கள் இவர் நமக்கு ஓட்டு போட மாட்டார் என்று பரிசு பணத்தை கொடுக்காமல் ஒதுங்கிப்போனால் கூட அதைக் கேட்டு வாங்கும் வாக்காளர்களும் நிறைய உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு வாக்காளர் தனக்கு வேட்பாளர்கள் கொடுத்த பரிசுப் பொருள்களை கோவிலுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழ்கா வட்டங் குறிச்சியை சேர்ந்த பிச்சமுத்து என்ற வாக்காளர் ஒரு எடுத்துக்காட்டாக இதை செய்துள்ளார். இந்த ஊராட்சியில் கீழ்கா வட்டங் குறிச்சி, மேல் காவட்டங் குறிச்சி, தட்டாஞ்சாவடி சேனாபதி குந்தரபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சி. இங்கு பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் சிலர் ஒவ்வொரு வீட்டுக்கும் குத்துவிளக்கு, சீப்பு, சில்வர் தட்டு என விதவிதமான பரிசுப் பொருட்களை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று  கொடுத்து வருகிறார்கள்.

 

Intimidation of person donated gifts to the temple

 



அப்படிப்பட்ட பரிசுப் பொருட்களை தான் பிச்சமுத்து என்ற வாக்காளர் தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி முன்பு வைத்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு, இந்த பொருட்கள் எனக்கு வேண்டாம் இது தெய்வத்திற்கு காணிக்கை என கூறி கோவிலில் வைத்து விட்டு திரும்பி விட்டார். அவர் கூறும்போது, "ஒவ்வொரு வேட்பாளரும் அன்பளிப்பை கொண்டுவந்து வலிய திணிக்கிறார்கள். வேண்டாம் என்றாலும் விட மறுக்கிறார்கள். நாம் பரிசுப்பொருட் கள் வேண்டாம் என்று கூறினாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிய பிறகு நாம் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை உருவாகிவிடுகிறது. 

இது மன உளைச்சலை ஏற்படுத்தியது. பரிசுப் பொருட்களை திருப்பிக் கொடுத்தாலும் வேட்பாளர்கள் கோபப்படுவார்கள். எனவேதான் எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அந்த பரிசுப் பொருட்களை காணிக்கையாக அளித்து விட்டேன். இந்த பரிசுப் பொருட்கள் வாங்கிய பிறகு எனக்கு இரவில் தூக்கமே வரவில்லை. மன உளைச்சலையும் உறுத்தலை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம், இதுபோன்ற அன்பளிப்புகள் பணம் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் கொடுப்பதை தடுக்கவேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் சுதந்திரமாக தங்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புறங்களில் உண்மையான வலிமையான உள்ளாட்சி அமைப்பு ஏற்படும். அப்போதுதான் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பாடுபடுவார்கள். இதை அரசு உறுதி செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

பிச்சமுத்து பரிசுப்பொருட்களை கோவிலுக்கு காணிக்கை ஆக்கியது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பிச்ச முத்துவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மிரண்டு போன பிச்சமுத்து தேர்தல் வரை ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள். உள்ளாட்சி தேர்தல் மூலம் மக்களுக்கு அருகிலிருந்து எளிமையான முறையில் அரசு திட்டங்களை சேவைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பிரதிநிதிகளை உருவாக்கத்தான் உள்ளாட்சித் தேர்தல். ஆனால் பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றி பெற்று செலவு செய்யும் பணத்தை விட பலமடங்கு தவறான வழியில் பணம் சம்பாதிக்கவே ஓட்டுக்கு பணம் பரிசு என கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். இந்தப் போக்கு மாறினால்தான் உண்மையான உள்ளாட்சி ஜனநாயகம் தழைக்கும் என்கிறார்கள் நேர்மையாளர்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.