Skip to main content

'ஈஷா' அறக்கட்டளையை எதிர்த்துப் போராடும் மணியரசனுக்கு மிரட்டல்... காவல்துறையிடம் புகார்.!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

Intimidation to Maniyarasan who fought against Isha Foundation ... Complain to the police

 

'ஈஷா' அறக்கட்டளை தலைவர் ஜக்கி வாசுதேவ் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியாரிடம் ஒதுக்க வேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 'தெய்வத் தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பின் மூலம், ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் என்று (ஆன்மிகத் தலைவர்களுடன் இணைந்து) தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில் மே 8ந் தேதி தஞ்சையில் பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அழைப்புக் கொடுத்திருந்தார். 

 

போராட்டம், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இது சம்மந்தமான வீடியோ நக்கீரன் இணையத்திலும், நக்கீரன் இதழிலும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த பலர் பெ.மணியரசனை ஃபோனில் மிரட்டுவதுடன் அவரை அவதூறு பரப்பும் விதமாக முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டு முகவரியையும் வெளியிட்டு அவரை கிருஸ்தவர் என்றும் பதிவிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மிரட்டல் பதிவுகள் வரும் நிலையில், பெ.மணியரசன் வெள்ளிக்கிழமை இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

அந்தப் புகாரில், “ஈஷா அறக்கட்டளை தலைவர் ஜக்கிவாசுதேவ் சமீப காலமாக தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 40 ஆயிரம் கோயில்களை தனிநபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் தவறு இருந்தால், அதனைச் சரி செய்து கோயில்களை நிர்வகிக்க வேண்டும் என்று ஆன்மிகச் சான்றோர்களுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினேன். இதனால், ஆத்திரமடைந்த ஜக்கிவாசுதேவ் ஆட்கள் என்னைத் தாக்கும் நோக்கத்துடன் கடந்த இரண்டு நாட்களாக முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் எழுதி என்னை மிரட்டி வருகிறார்கள்.

 

நான் மரபு வழி இந்துவாக இருந்தாலும் அவர்கள் கெட்ட நோக்கத்துடன் என்னை கிருஸ்தவர் என்றும் என் பெயர் 'டேவிட்' என்று எழுதி பரப்பி வருகிறார்கள். ஆகவே, இந்தச் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் அந்தப் புகாரில் கூறியுள்ளார். மேலும் போராட்டத்திற்குள் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர், ஈஷா அறக்கட்டளை ஆதரவாளர்களால் தாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் போராட்டத்திற்கான ஆதரவும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈஷா அறக்கட்டளை பற்றிய பல புதிய தகவல்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.