Skip to main content

இணைய வசதியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்... -த.மா.கா கோரிக்கை!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Internet facility should be provided to students free of cost ...


"மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் கல்வி பயில்வதில் தடையேதும் இருக்கக்கூடாது. இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்களின் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு ஆளும் அரசு அறிவிப்புகளை வெளியிட வேண்டும்" என தமிழ் மாநில காங்கிரசின் இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா கூறியுள்ளார்.

 

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவல், நமது இந்தியாவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. மீண்டும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை இல்லை. அதேபோல கல்லூரி படிக்கும் மாணவர்களின் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என யு.ஜி.சி தெரிவித்ததை அடுத்து, செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த உத்தரவையடுத்து, பல்வேறு பல்கலைக்கழகங்கள் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்த ஆரம்பித்துள்ளன. கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடர்ந்து வழக்கம் போல, 3 மணி நேரம் ஆன்லைன் தேர்வாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுவதால், இதில் கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் மாணவர்கள் அனைவருக்கும் போதிய இணையத்தள வசதி கிடையாது. அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை.

 

Ad


எனவே, அரசு இந்த உண்மை நிலையைப் புரிந்து கொண்டு உரிய முறையில் மாணவர்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதிய இணைய வசதிகளுடன் தேர்வுகள் எழுத அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கான அதிவேக இணையத்தள வசதியை, அரசு இலவசமாக வழங்கிட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென த.மா.கா இளைஞரணி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் வகுப்பில் வெடித்த செல்ஃபோன் - மாணவர் படுகாயம்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

jgh

 

செல்ஃபோன் வெடித்ததில் மாணவர் படுகாயமடைந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கரோனா தொற்றுக்குப் பிறகு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளித்திருந்தது. இருந்தாலும் தொடர்ந்து கரோனா பாதிப்பு இருந்ததால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புக்களை எடுக்கத் துவங்கினர். தற்போது இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டுவருகின்றன. 

 

பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்கள் நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் ஆன்லைன் வழியாக பாடத்தைக் கவனித்து வந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாணவனின் செல்ஃபோன் வெடித்துச் சிதறியது. இதில் மாணவன் கன்னம், காது உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.

 

 

Next Story

ஆன்லைன் வகுப்பின்போது 5ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

A tragedy happened to a 5th grade student during an online class
                                                                   மாதிரி படம்

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பலரும் வீடுகளில் முடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கரோனாவின் தாக்கம் முழுவதுமாக குறையாத காரணத்தால் குழந்தைகளுக்குப் பள்ளிகளைத் திறப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பள்ளிகள் திறக்காததால் இன்றுவரை ஆன்லைன் வகுப்புகளை அடிப்படையாகக் கொண்டே பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. மேலும், இன்றைய சூழலில் அலுவலக வேலை என்றாலும் சரி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் என்றாலும் சரி அனைத்துமே டிஜிட்டல் சேவையை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

 

பொழுதை வீணாக கழிப்பார்கள் என்ற எண்ணத்தில் பொதுவாகவே குழந்தைகளிடம் நாம் மொபைல் ஃபோனை கொடுக்க மாட்டோம். ஆனால் இன்று ஆன்லைன் வகுப்புகளுக்காக நாமே நமது குழந்தைகளிடம் மொபைல் ஃபோனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் மொபைல் ஃபோன்கள், பிற மின்சாதன பொருட்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், வேறு வகையிலான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது ஸ்மார்ட் ஃபோன் வெடித்துச் சிதறியதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார். வியட்நாம் நாட்டின் நிகே அன் மாகாணத்தில் நாம் டென் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதாகும் 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று மாலை ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்தார்.

 

அந்த மாணவர் மொபைலை சார்ஜில் போட்டவாறு, காதுகளில் இயர் ஃபோனை மாட்டி பாடங்களைக் கவனித்து வந்தபோது திடீரென மாலை 4 மணியளவில் அந்த மாணவர் பயன்படுத்திய மொபைல் பேட்டரி அதிக சூடால் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தினால் அந்த மாணவரின் உடையில் தீப்பற்றி எரிந்திருக்கிறது. காயத்தில் தவித்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின், உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாம் டென் மாவட்டத்தில் கடந்த மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததால், வாரத்தில் ஒருநாள் மட்டும் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் பாடம் நடத்திவருகின்றனர். இந்நிலையில்தான் இந்த விபத்தில் மாணவர் உயிரிழந்திருக்கிறார்.