ADVERTISEMENT

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை; அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி உத்தரவு

05:35 PM Nov 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து (21.10.2023) தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று தெரிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காணொளி காட்சி வாயிலாக இன்று (15.11.2023) ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள், அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்களுடனும் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும், பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை அமைச்சர் தங்கம் தென்னரசு மேற்கொண்டார்.

மேலும், கனமழை பெய்து வரும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சார வாரியம் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த 4 ஆம் தேதி (04.11.2023) நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அனைத்தினையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 159 மின் கம்பங்கள் மற்றும் 72 மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்கால அடிப்படையில் துரிதமாக சரி செய்வதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் வட்டத்திற்கு 10 இலட்சம் வீதம் மொத்தமாக 4.4 கோடி நிதியினை உடனடியாக வழங்கிட அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.

அதன் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94967 என்ற அலைபேசி எண்ணின் வாயிலாகவும், அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்குமாறும், மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் மின்சார வாரியம் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT