Skip to main content

நல்லது கெட்டதிலும் உடனிருக்கும் காப்பீடு திட்டம்... ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு குவியும் பாராட்டு...

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

 

பணியின் போது இறக்கும் போலீசாரின் குடும்பத்திற்கு காவலர் குழு காப்பீட்டுத் திட்டம் மூலம் அக்குடும்பம் பொருளாதார சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது ஈரோடு மாவட்ட காவல் துறை.
 

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்த வரதராஜன் சென்ற வருடம் 11.11.19- அன்று கோபி - சத்தி  சாலையில் கரட்டடிபாளையம் அருகே  நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதேபோன்று ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வந்த செந்தில்குமார் சென்ற 20.11.19-ல்  ஈரோடு சத்தி ரோடு கனிராவுத்தர் குளம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார்.

 

District Police



இப்படி சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் துரித செயல்பாடு மூலமாக ஈரோடு பாரத ஸ்டேட் வங்கி   மூலம் காவலர் குழு காப்பீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.30 லட்சம் பெறப்பட்டது.
 

இந்தத் தொகையை அந்தக் குடும்பத்தாருக்கு வழங்கும் நிகழ்ச்சி  கோவை  ஐஜி அலுவலகத்தில் நடந்தது.  விபத்தில் உயிரிழந்த வரதராஜன் மனைவி பாரதி மற்றும் செந்தில்குமார் மனைவி கலா ஆகியோருக்கு கோவை ஐஜி பெரியய்யா தலா 30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன்,  பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு இதுவரை ரூபாய் 1 கோடியே 20 லட்சம்  தொகை காவலர் குழு காப்பீடு திட்டத்தின் மூலம் அந்தந்த குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல் இறந்தவர்களுக்கு  அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து பணப்பயன்களும் உடனடியாக அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கனேசன் இதற்கென எடுத்த தனி முயற்சிதான் என்கிறார்கள் போலீசார். உயிரிழந்த போலீசார் குடும்பத்தினரிடம் பணத்தைப் பாதுகாப்பாகவும் உரிய முறையில் சேமித்துப் பயன்படுத்த ஆலோசனை வழங்கினார் எஸ்.பி. சக்தி கணேசன். 
 

காவல் பணியில் உள்ள போலீசாரை வேலை வாங்குவது மட்டும் ஒரு உயரதிகாரியின் வேலையல்ல உடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேரும் நல்லது கெட்டது என எதுவானாலும் உடனிருந்து முழுமையாக செய்வதும் இவர் போன்ற அதிகாரிகளின் பணி தான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.