
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட கோவில்பத்து தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ்(23). இவர் சென்னையில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். நண்பனின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்த இவருக்கும் அதே பகுதியில் உள்ள சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கை கலப்பு சண்டை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரவீன்ராஜ் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மாலை எங்க மேலேயே புகார் கொடுக்க உனக்கு அவ்வளவு தைரியமா? என கேட்டு பிரவீன்ராஜ் வீட்டின் அருகே ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளது.
இதுகுறித்து புகார் கொடுத்தபோது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்றும், இதுபோல் பல்வேறு விஷயத்தில் காவல்துறையினர் அலட்சியமாகவும், கட்ட பஞ்சாயத்து செய்தும் அனுப்பி வைகிறார்கள் என்று பொதுமக்கள் மற்றும் பிரவீன் ராஜின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடத்திய விசாரணையில் கட்டுமன்னார்கோவ்யில் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்துச் சம்பவம் பல நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், இதற்கு துணையாக இருந்த தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.