Skip to main content

நீர்நிலை பராமரிப்பை தொடர வலியுறுத்தும் 18-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு!

Published on 08/03/2021 | Edited on 09/03/2021

 

Inscription urging to continue water level maintenance from generation to generation!


நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் 'ஆளமஞ்சி' எனும் கட்டாய வேலை தலைமுறை தலைமுறையாகத் தொடர வலியுறுத்தும் கல்வெட்டு தேவகோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வாடி நன்னியூர் கண்மாய் அருகில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், வாடி நன்னியூர் ரெத்தினம் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார்.

 

இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது, "வாடி நன்னியூர் கண்மாய் அருகில் 2 அடி உயரமும் 1 அடி அகலமும் உள்ள வைரம் போன்ற அமைப்பில் உள்ள ஒரு கருங்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதை அரிவாள் தீட்டுவதற்குப் பயன்படுத்தியதால் மன்னர் பெயர் இருந்த முதல் வரி அழிந்துவிட்டது. தற்போது இக்கல்வெட்டில் 13 வரிகள் மட்டுமே உள்ளன. பிறவரி, ஆளமஞ்சி ஆகியவை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக நடைபெற வேண்டும். இதற்கு யாராவது தீங்கு செய்தால் அவர்கள் கங்கை மற்றும் சேதுக்கரையில் காராம் பசுவையும், பெற்றோரையும் கொன்ற தோசத்திலே போகக் கடவதாக என்பது கல்வெட்டு சொல்லும் செய்தி.
 

Inscription urging to continue water level maintenance from generation to generation!

 

இதில் நிலத்துக்கு விதிக்கப்படும் புரவரியை பிறவரி எனச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் கட்டாய வேலை ஆளமஞ்சி எனப்படுகிறது. இந்த இரண்டும் சந்திரன், சூரியன் உள்ள வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என சந்திரப் பிரவேசமாகக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதில் ஒருசேர இணைத்து என்பதற்கு 'அன்றில்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக என்ற பொருளில் சந்ததிப் பிரவேசம் என்பதை சந்திரப் பிரவேசம் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

 

கல்வெட்டில் ‘ர்,ர’ ஆகிய எழுத்துகள் சேர்ந்து ‘ள’ போல உள்ளது. ‘த’ என்ற எழுத்து ‘ற’ என எழுதப்பட்டுள்ளது. எழுத்துகளை சேர்த்து கூட்டெழுத்தாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை என்றாலும், இதன் அமைப்பைக் கொண்டு இது சேதுபதி மன்னர்கள் அல்லது அவர்கள் அரசப் பிரதிநிதிகளின் கல்வெட்டு எனக் கருதலாம். தற்போது இவ்வூர் வாடி நன்னியூர் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் நன்னியூர் வாடி எனக் குறிப்பிடப்படுகிறது. முல்லை நிலத்து ஊர் என்ற பொருளில் பாடி என அழைக்கப்பட்டு அது வாடி எனத் திரிந்துள்ளது. வாடி என்பதற்கு சாவடி என்ற பொருளில் காவல் அலுவலகமாகவும் இவ்வூர் விளங்கியிருக்கலாம். நன்னியூர் என்பதற்கு சிறிய ஊர் என்பது பொருள்.

 

இவ்வூரில் கி.பி.13- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டுக்கைகள் கொண்ட காளி சிற்பம் சிறிய கோயில் அமைத்து வழிபடப்படுகிறது. இக்கோயில் முன் உடைந்த திருமால் சிற்பமும் உள்ளது. இங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் கண்மாய்ப் பகுதியில் காணப்படுகின்றன. இதன்மூலம் இவ்வூரில் கி.பி.13- ஆம் நூற்றாண்டு முதல் மக்கள் குடியிருப்பு இருந்துள்ளதை அறிய முடிகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.

Next Story

900 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
900 year old Tamil inscription discovered!

சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத் தலைவர் தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின் பேரில் பொறுப்பு ஆசிரியர்களான அன்பரசி, விஜயகுமார் ஆகியோரிடம் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி இப்பள்ளியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பாணாபுரம் என்ற கிராமத்திற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணம் சென்றனர். 

அங்கு மாணவர்கள் காட்டிய விவசாய நிலத்திற்குள் ஒரு தமிழ் கல்வெட்டு காணப்பட்டது. கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்து கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது. ஆசிரியர் அன்பரசி கல்வெட்டு படி எடுத்து ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு என்பதை அறிந்து, படி எடுத்த கல்வெட்டை அதன் விபரங்களை அறிந்து கொள்ள சென்னை தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர் முனைவர் சு. ராஜகோபால் அவர்களிடம் படிக்கச் சொல்லி கூடுதல் தகவல் பெற்றுள்ளனர்.

900 year old Tamil inscription discovered!

அதாவது, பூமிக்கு மேல் நின்ற நிலை உள்ள செந்நிற பலகை கல் 3 அடி உயரமும் 2.5 அடி அகலமும் உடைய கல்லில் 12 வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதில் கொங்கு வீரபாண்டியன் ( 1265 + 21 = 1286 ) பொது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து இறைவனுக்கு வாணாபுரம் (பாணாபுரம்) தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது. கொடுத்தவர் அரசனாக இருக்கலாம். நாடும் வண்ணவுடையும் கொடுத்திருக்கலாம் என்ற செய்தி கல்வெட்டில்  உள்ளது. கல்வெட்டில் வாணாபுரம் என்று உள்ளது தற்பொழுது பெயர் மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது என்பதும் தெரிய வந்தது.