Skip to main content

திருமணம் எனும் பெயரில் நூதன மோசடி! கண்ணீருடன் காவல்நிலையத்தில் இளம்பெண்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Innovative scam in the name of marriage! Teen at the police station with tears!

 

கோவில்பட்டியைச் சேர்ந்த மித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையை இழந்த இவர் தனது தாயுடன் வசித்துவருகிறார். இவர்கள் வேலைக்காக சென்னையில் வசித்துவந்துள்ளனர். அப்போது, மித்ரா தனது பக்கத்து வீட்டில் வசித்துவந்த அஜித் எனும் இளைஞரைக் காதலித்துள்ளார். இதனை அவர், தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அஜித்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மித்ராவின் தாய் முதலில் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, மித்ரா சமாதானம் செய்யவே அவர்கள் திருமணத்திற்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி அவர்களது திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அஜித் மது அருந்துவதைத் தொடர்ந்ததால், அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்து நடந்து மித்ரா மீண்டும் தனது தாயுடன் வசித்துவந்துள்ளார். 

 

இந்நிலையில், மித்ராவின் தாய் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க திருமணம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஒரு நபர் சித்ராவுக்கு போன் செய்து, திருமண இணையதளத்தில் மித்ராவை பார்த்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மித்ரா, தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தனது தாயின் கட்டாயத்திற்காக அதில் பதிவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், விடாப்பிடியாக அந்த நபர், தானும் விவாகரத்து ஆனவர்தான் என்றும், சிறிது காலம் பழகி பார்க்கலாம் அதன்பிறகு ஒத்துவந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

 

அதன்படி இருவரும் செல்போனில் பேசி பழகிவந்துள்ளனர். இந்நிலையில், ஒரு நாள் திடீரென அந்த நபர் மித்ராவின் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார். அதன்படி கடந்த 19ம் தேதி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் அந்த நபரை சந்திக்க மித்ரா, தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றுள்ளார். காலை நேரத்தில் அங்கு வந்த அந்த நபர், மித்ராவிடம் பசிக்கிறது ஏதாவது பெரிய உணவகத்திற்குப் போகலாம் என்று சொல்லிக் கேட்டுள்ளார். மித்ராவும் அருகிலிருந்த பெரிய உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

 

அங்கு திடீரென அந்த நபர், தன் பையிலிருந்து ஒரு செயினை எடுத்து மித்ராவின் கழுத்தில் போட்டுவிட்டுள்ளார். மேலும், மித்ரா கழுத்திலிருந்த பழைய செயின் இந்த புதிய செயினின் அழகை கெடுப்பதாகவும், அந்தப் பழைய செயினை தன்னிடம் தந்தால் தான் அதனை போட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி மித்ராவும் அந்த செயினை அவரிடம் கொடுத்துள்ளார். மேலும், ஒரு கவரை மித்ராவிடம் கொடுத்து அதில் ரூ. 3 இலட்சம் இருப்பதாகவும் அதனை இன்றைய செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். பின் அங்கு இருந்து இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, அந்த நபர் மித்ராவிடம் கொஞ்ச தூரம் பைக்கில் போவோம் என்று சொல்லியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து மித்ராவின் கைப்பை, அவரின் கைப்பேசி, அந்த நபரின் கைப்பேசி உள்ளிட்டவற்றை மித்ராவின் கைப்பையை இருக்கையின் கீழ் இருக்கும் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, பைக்கை அவர் எடுத்துள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு அந்த நபர், “பைக் சூப்பரா இருக்கு. நான் இது வர வீலிங் பண்ணினது இல்லை. ஒரு முறை வீலிங் பண்றேன்” என்று கேட்டுள்ளார். அதனால் மித்ராவும் பைக்கிலிருந்து கீழே இறங்கி நிற்க அந்த நபர் பைக்குடன் அங்கிருந்து தப்பித்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மித்ரா அங்கிருந்த ஒரு முதியவரின் உதவியுடன் சொந்த ஊருக்கு வந்து நடந்ததை தன் தாயிடம் கூறியுள்ளார். 


அதன்பிறகு மித்ராவும், அவரது தாயும் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், தனது 3 பவுன் தங்கச் செயின், செல்போன், பைக் எல்லாவற்றையும் திருடிக் கொண்டு சென்றுவிட்டார். அவரைப் பார்த்தால் அடையாளம் காட்டமுடியும். நான் இழந்த ரூ.1,25,200 மதிப்புள்ள பொருட்களை எல்லாம் கண்டுபிடித்து மீட்டுத் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

 

அந்தப் புகாரை ஏற்ற சாத்தூர் தாலுகா காவல்துறையினர், அடையாளம் தெரியாத அந்த நபர் மீது பிரிவு 406 (நம்பிக்கை மோசடி செய்தல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

துப்பாக்கிச்சூடு சம்பவம்; பாஜக எம்எல்ஏ கைது!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
maharashtra ulhasnagar police station bjp mla issue

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட், சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகாரளிக்க வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகேஷ் கெய்க்வாட்டை, பாஜக எம்.எல்.ஏ. கணபத் கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ் கெய்க்வாட்டின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கன்பத் கெய்க்வாட் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தானே மாவட்ட போலீஸ் டி.சி.பி. சுதாகர் பதரே கூறுகையில், “ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிசி மற்றும் ஆயுதச் சட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர்  பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.