Skip to main content

எம்.பி., எம்.எல்.ஏ க்கள் தங்கள் பெயர்களை எழுதுவதற்கு புதிய விதிமுறைகள்: தமிழ்நாடு அரசு அரசாணை

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Initials of the name to be in Tamil Government release!

 

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அரசாணையின் விவரம் பின்வருமாறு, " தமிழ்நாடு அரசின் ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக தமிழ் பயன்பாட்டு மொழியாக இருக்க செய்திடும் வகையில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே ஒப்பமிட வேண்டும் என முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ளது.

 

இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initials) (தந்தை, தாய், ஊர்) பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது.

 

மேலும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசு கடிதத்தில் அரசுத் துறைகளில் வெளியிடப்படும் அறிவிப்புகள், அறிவிக்கைகள் ஏல விளம்பரங்கள் இதர விளம்பரங்கள் போன்றவை வெளியிடுகையில் அதில் அலுவலர்களின் பெயர்களுக்கு முன் குறிப்பிடப்படும் முன்னெழுத்தானது ஆங்கில எழுத்து உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்து (எஸ்.முத்து) எழுதப்படுகிறது.

 

இதனைத் தவிர்த்துச் சரியாக தமிழ் முன் எழுத்தையே (சு.முத்து) பயன்படுத்துமாறும் அவ்வாறே அரசு அலுவலர்கள் கையொப்பமிடும் போது பெயருக்கு முன் சரியான தமிழ் எழுத்துக்களையே குறிப்பிட்டு கையொப்பமிடுமாறும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இவ்வாறு கையொப்பம் மற்றும் முன்னெழுத்து ஆகியவற்றை தமிழில் எழுத பல்வேறு அரசாணைகள் மூலம் தெரிவிக்கப் பெற்றிருந்தும் அரசு அலுவலர்கள் கூட முன்னெழுத்தை முழுமையாகத் தமிழில் எழுதுவதில்லை.

 

எனவே மேற்கண்ட அரசாணைகளின் அடிப்படையிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பினை செயற்படுத்தும் வகையிலும் முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போது முன்னெழுத்தை தமிழிலேயே எழுத வேண்டும்.

 

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தை தமிழிலேயே எழுத வேண்டும். பள்ளி, கல்லூரி முடித்து சான்றிதழ் பெறும்போதும் முன்னெழுத்துடன் கையெழுத்து தமிழில் இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை கொண்டுவரலாம், அதே போன்று மாணவர்களின் சான்றிதழை பெற்றோர் கையொப்பமிட்டு பெறும்போது முன்னெழுத்து மற்றும் கையெழுத்தினை தமிழிலேயே இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப் பெறலாம்.


பள்ளிப் பருவத்திலேயே இந்த நடைமுறையினை ஊக்குவித்தால் மாணவர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிய வழிவகுக்கும். பொதுமக்கள் அதிகம் அணுகும் அரசுத் துறைகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறை, வணிகவரித் துறை, சமூக நலத் துறை, காவல் நிலையம், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பொதுமக்களால் நிறைவு செய்து அளிக்கப்பெறும் கோரிக்கை விண்ணப்பங்களில் முன்னெழுத்துடன் தமிழில் கையொப்பம் இடும் வகையில் நடைமுறைப்படுத்தப் பெறலாம் (உதாரணம் K.N.சுவாமிநாதன் என்பதை க.ந.சுவாமிநாதன்).

 

ஏனைய அரசுத் துறைகளான வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்திடலாம். மேலும் அனைத்துத் துறைகளிலும் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்படும் பெயர்களில் முன்னெழுத்தையும் தமிழ், ஆங்கிலம் கலந்து பதிவு செய்யலாம் பெயரின் முன்னெழுத்து மற்றும் பெயர்களை முழுமையாகத் தமிழிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் ஆணையிடப் பெறலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.