Skip to main content

மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் ஆணையம் அபராதம் விதிப்பு! 

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Information Commission imposes fines on electricity officials

 

விழுப்புரம் மாவட்டம், விராட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், தமிழ்நாடு மின்வாரியத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தனது ஊரில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக பம்பு செட்டு அமைக்க மின் இணைப்பு கேட்டு சுயநிதி திட்டத்தின் கீழ் முறைப்படி பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளார். ஆனால், ராஜேந்திரனுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 

 

சந்தேகமடைந்த ராஜேந்திரன், உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டி 10.10.2019ஆம் தேதி வரை மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்கள் பட்டியலை தெரிவிக்குமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019ம் தேதி ராஜேந்திரன் விண்ணப்பித்துள்ளார். இதில், செஞ்சி மின்பகிர்மான வட்ட அதிகாரி மட்டும் உரிய தகவலை அளித்துள்ளார். ஆனால் விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் ஆகிய மின் பகிர்மான வட்டச் செயற்பொறியாளர்கள் உரிய தகவல் அளிக்கவில்லை.

 

இது குறித்து ராஜேந்திரன் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இவரது மேல்முறையீட்டு மனு மாநில தகவல் ஆணையர் தமிழ் குமார் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து ஆணையர் தமிழ்குமார், “வேண்டுமென்றே திட்டமிட்டு ராஜேந்திரனுக்கு தகவல் தர மறுத்து காலம் கடத்தியுள்ளனர் என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. எனவே, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தகவல் வழங்க மறுத்ததால் சட்ட விதி 19 (8) (B) ஆகிய பிரிவுகளின் படி இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் அப்போதைய விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம், பகிர்மான வட்டத்தில் மின்வாரிய செயற் பொறியாளர்களாக பணியில் இருந்தவர்கள் தலா ஐந்தாயிரம் ராஜேந்திரனுக்கு நஷ்ட ஈட்டு தொகையாக வழங்க வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 20 (1)ன் படி நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது எனவே இதற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும்” என்று மாநில தகவல் ஆணையர் தமிழ் குமார் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.