சிவகங்கை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயத்துடன் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கழுத்து மற்றும் கைகள் அறுக்கப்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சாலை பகுதியில் வீசி செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அந்த வழியாகச் சென்றுமரியம்பீவி என்ற பெண் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை சாலையில் வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து குழந்தையை மீட்டமரியம்பீவி தெரிவிக்கையில், ''குழந்தை கீழே கிடப்பதாக கத்தினார்கள்.நான் சென்று பார்த்தபோது சந்து இடுக்கில் மண்ணுக்குள்ளே குழந்தை கிடந்தது. பார்த்தவுடனே தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் வந்து விட்டேன். குழந்தை உயிர் பிழைச்சா போதும் சார். குழந்தையைபார்த்த உடனே காப்பாற்ற வேண்டும் என்று தான் தோணுச்சு மற்றவர்கள் போல கத்திக் கொண்டிருக்க மனம் நினைக்கவில்லை'' என்றார்.