Skip to main content

பெற்றோரின் ஊக்கத்தால் கிராண்ட் மாஸ்டரான புதுக்கோட்டை மாணவர்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

indias 28th grand master pranesh in pudukkottai district

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இவர்களது இளைய மகனான பிரனேஷ், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை முனிரத்தினம் காரைக்குடியில் உள்ள ஒரு கடையில் கணக்காளராக வேலை பார்த்து வரும் நிலையில் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில், தனது இளைய மகன் பிரனேஷுக்கு 6 வயது இருக்கும்போது செஸ் விளையாட்டில் அவருக்கு இருந்த ஆர்வத்தை தெரிந்துகொண்ட முனிரத்தினம் பிரனேஷை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். சிறுசிறு போட்டிகளில் கலந்துகொண்ட பிரனேஷ் நாளடைவில் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.  ஆனால், தனது குடும்ப வறுமை காரணமாக பிரனேஷால் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் அவரின் சாதனைகள் தள்ளிப்போனது.

 

பிரனேஷ் படிக்கும் பள்ளியின் தாளாளர் சுவாமிநாதன், மாணவரின் திறமையைக் கண்டு வியப்படைந்துள்ளார். மேலும், பிரனேஷின் படிப்பில் எந்தத் தடையும் ஏற்படாதவாறு அந்த செலவைத் தானே ஏற்றுக்கொண்டு அவருக்கு பல்வேறு உதவிகளைச் செய்தும் வந்துள்ளார். இத்தகைய உதவிகளால் பல்வேறு செஸ் போட்டியில் பங்கு பெற்று வந்தார். இந்நிலையில் ஸ்வீடனில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க பிரனேஷிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மீண்டும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.  இருப்பினும், அந்த சமயத்தில் பெற்றோர்கள் கொடுத்த ஊக்கத்தாலும், பள்ளி தாளாளரும், பயிற்சியாளரும் செய்த உதவியாலும் தனியாக ஸ்வீடனுக்குச் சென்ற பிரனேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்துடன் தங்கப் பதக்கத்தை வென்று மிகப்பெரிய சாதனையைப் படைத்தார்.

 

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்னும் சிறப்பையும், தமிழகத்தின் 28வது கிராண்ட் மாஸ்டர் என்னும் சிறப்பையும் மாணவர் பிரனேஷ் பெற்றுள்ளார். தங்கப் பதக்கத்தை வென்ற பிரனேஷ், சென்னை திரும்பியவுடன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு, காரைக்குடிக்கு வந்த பிரனேஷுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இதுகுறித்து மாணவர் பிரனேஷ் பேசும்போது, "ஸ்வீடனில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் நார்வே வீரருடன் விளையாடியது சவாலாக இருந்தது. எனக்கு உதவிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ரோல் மாடல் கார்ல்சன். ஒன்பதுக்கு எட்டு புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளேன். என்னுடைய பெற்றோர், பயிற்சியாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு சார்பில் உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்" எனப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அர்ஜுனா விருதை பெற்ற தமிழக செஸ் வீராங்கனை

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Arjuna award winning chess player from Tamil Nadu

மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது 26 பேருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்திய கிரிக்கெட் வீர முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த விருது பட்டியலில் அண்மையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அர்ஜுனா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அர்ஜுனா விருதினை வழங்கினார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அர்ஜூனா விருதினை வழங்கினார். இதே போன்று மற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி என்பதும், கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது பெற்ற நிலையில் இந்தாண்டு அவரது சகோதரி வைஷாலிக்கு அர்ஜுனா விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; பட்டம் வென்ற தமிழக வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tamil Nadu player who won Chennai Grand Masters Chess Championship title

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் இன்று (21.12.2023) வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடினார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர்.