Indian Students Union condemn to Governor R.N. Ravi

Advertisment

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயில் முன்பு, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரவிந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப்பட்டப் படிப்பை பயின்று வெளியேறிய 2 லட்சம் மாணவர்களுக்கு இதுவரை பட்டம் வழங்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்தி வருகிறார். இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநராகிய நான் மட்டும்தான் நியமிப்பேன், மாநில அரசிடம் ஒருபோதும் நான் கேட்க மாட்டேன் என்று எதேச்சதிகாரமாக கூறுகிறார். இதனைக் கண்டிக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆளுநரின் உருவம் பதித்த படங்களை மாணவர்கள் கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆளுநரின் படத்தை காலில் போட்டு மிதித்தும், கிழித்தும், போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆளுநரின் படத்தை மாணவர்கள் எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர் அரவிந்தசாமி, “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க, மாநில உயர்கல்வி அமைச்சரின் தலைமையில் ஏற்படுத்தக்கூடிய தேடல் குழுவை ஆளுநர் ஆர்.என். ரவி அமைக்காமல், மத்திய பல்கலைக் கழகங்களில் இருக்கக்கூடிய துணைவேந்தர்களை அந்த குழுவில் இணைத்து நான் தான் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பேன் என்று கூறி,தன்னிச்சையாக செயல்படும் போக்கைக்கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர், பல்கலைக்கழகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஆளுநர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்த போராட்டம் தொடரும்” எனத்தெரிவித்தார்.