Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Indian soldier passed away because of extramarital affair in tuticorin

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து. இவருடைய மகன் வேல்முருகன் (25). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்த பின்பு, தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த கடந்த 1 ஆம் தேதி விடுப்புக்காகத் தனது சொந்த ஊரான வெம்பூருக்கு வந்துள்ளார். 

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (16-10-23) இரவு, இவர் தனது வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவர் உடலில் பலத்த கத்திக் குத்து காயங்களுடன் மாடியிலிருந்து கீழே வந்து சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அவரது தாய் பாக்கியலட்சுமி, சகோதரி முருகவள்ளி ஆகியோர் அறையிலிருந்து ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த வேல்முருகனைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 

உடனடியாக, இந்த சம்பவம் தொடர்பாக மாசார்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்ட மற்ற காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வேல்முருகனை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி (29, திருமணம் ஆகாதவர்) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 32 வயது திருமணமான  பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளதாகத் தெரியவந்தது. மேலும், ராணுவத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன், விடுப்பில் ஊருக்கு வந்தபோது அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த மாரிச்சாமி, வேல்முருகனை கண்டித்துள்ளார். ஆனாலும், வேல்முருகன் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். 

 

இதனால், மாரிச்சாமிக்கும், வேல்முருகனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த விரோதத்தால், வேல்முருகனை கொலை செய்ய மாரிச்சாமி திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் மாடிக்குச் சென்று தூங்குவதை மாரிச்சாமி நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து மாரிச்சாமி, வேல்முருகன் வீட்டு மாடிக்குச் சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரைச் சரமாரியாகக் கத்தியால் குத்தி அதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து மாசார்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாரிச்சாமியை கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.