Skip to main content

“உணவு பாதுகாப்பில் அபாய கட்டத்தில் இந்திய மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்..” - உ.வாசுகி  

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

"Indian people are at risk in food security." - U. Vasuki

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 7 ஆண்டு கால மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசாங்கமாகத்தான் இருக்கிறது. சாதாரண மக்களுக்கான அரசாங்கமாக இல்லை. உலக பட்டினி குறியீட்டில் உள்ள 116 நாடுகளில் ஏற்கனவே 94வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101 வது இடத்திற்குச் சரிந்திருக்கிறது. உணவு பாதுகாப்பில் அபாய கட்டத்தில் இந்திய மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் 7 ஆண்டு கால மோடி ஆட்சிக்கான சாட்சி.

 

கௌதம் அதானி,  மோடி அரசுக்கு முன்பு வரை பணக்காரர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் இன்றைக்கு ஆசியாவிலேயே 2-வது இடத்தில் அவர் இருக்கிறார். அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்காகத்தான் இந்த அரசு இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன் பட்டியலை ஒருங்கிணைத்து கடனுக்கான ஒரு வங்கியைத் திறந்து, வாராக் கடன்களை அதற்கு மாற்ற முயற்சி நடந்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து மக்களுக்குக் கண்ணீரை வரவழைக்கிறது.

 

இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் காரை ஏற்றி கொலை செய்யப்படுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகுதான் மத்திய இணை அமைச்சரின் மகன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை மத்திய இணை அமைச்சர் பதவி விலகவில்லை. பாமர மக்களுக்கான பாதக கொள்கைகளைத்தான் பாஜக அரசு எடுத்து வருகிறது.

 

மாநில உரிமைகள் பறிப்பு விஷயத்திலும் அதுபோலத்தான் உள்ளது. தமிழக அரசு மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருவது பாராட்டத்தக்கது. பொதுச் சொத்துக்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடுகிறார்கள். எந்தவித முதலீடும் இல்லாமல் நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாடுகின்றனர். தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது. அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் காந்தி ஜெயந்தி விடுமுறை, மே தின விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

ad

 

100 நாள் வேலைத் திட்டம் குறித்து எந்தக் கிராமத்திற்குச் சென்று மக்களுடன் சீமான் கலந்துரையாடினார். அது போன்ற பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் கலந்துரையாடிவிட்டு அவர் இந்த 100 நாள் வேலையைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். விருத்தாசலத்தில் சாதி ஆணவக் கொலையில் முதல் முறையாக காவல்துறையினரும் தண்டிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது” என்று பேசினார். 

 

இவருடன் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ராமச்சந்திரன், தேன்மொழி, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.