கமல்ஹாசன் மீது தமிழக அரசு விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்வதாக மக்கள் நீதி மையம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்தபோது கடந்த மாதம் 19ம் தேதி விபத்து ஏற்பட்டு உதவி இயக்குனர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனத்தினர் மீது தமிழக அரசு விசாரணைக்கு அழைத்து உத்தரவிட்டது.
நடிகர் கமல்ஹாசனை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்வதாக மக்கள் நீதி மையம் கட்சியினர் கண்டனம் தெரிவித்து திண்டுக்கல் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது சம்பந்தமாக கட்சியின் நற்பணி இயக்க மாநில செயலாளர் தங்கவேலு விடுத்துள்ள அறிக்கையில், "விசாரணை என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசனை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து 3 மணி நேரம் விசாரித்துள்ளனர். லிப்ட் வசதி இருந்தும் மாடி வழியாக நடக்க வைத்து அழைத்துச் சென்றுள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் கூட அவர் பங்கேற்கவில்லை. மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு செய்து தர வேண்டுமென தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிக்கையாக கொடுத்துள்ளனர்.
அனைத்து துறை ஊழியர்கள் மீதும் அவர் மிகுந்த அக்கறை கொண்டவர். தமிழக அரசு இது போன்ற செயலை இனியும் தொடராமல் நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.