Skip to main content

விளைச்சல் அதிகரிப்பு... தேங்காய் டன்னுக்கு 2000 ரூபாய் சரிந்தது! 

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Increase in yield...Coconut fell by Rs 2000 per ton!

 

தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டன்னுக்கு 2000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. 

 

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய சமையலில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் முக்கிய இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் சேலம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, தர்மபுரி, ஈரோடு, காங்கேயம், பெருந்துறை, பொள்ளாட்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை முக்கிய பணப்பயிராக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தேங்காய்கள் நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தேங்காய் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. 

 

இது தொடர்பாக தேங்காய் வியாபாரிகள் கூறுகையில், ''சேலம் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சராசரியாக 300 டன் முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் வரத்தும் அதிகமாக இருக்கும். தற்போது சீசனும் நன்றாக உள்ளது. 


கொங்கு மண்டலத்தில் ஆடி 1ம் தேதி, தலையாடி என்ற பெயரில் முக்கிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால், தேங்காய்க்கான தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஒரு டன் தேங்காய் 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் ஒரு டன் தேங்காய் தற்போது 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அடுத்த மாதம் டன்னுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் குறைய வாய்ப்பு உள்ளது.


சில்லறை விலையில் தேங்காய் அதன் அளவைப் பொருத்து பல்வேறு விலைகளில் விற்பனை ஆகின்றன. பெரிய அளவிலான தேங்காய் 20 ரூபாய்க்கும், நடுத்தரமானது 15 முதல் 12 ரூபாய் வரையிலும், சிறிய அளவிலான தேங்காய் 10 முதல் 8 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகின்றன,'' என்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் கொடு! - சென்னையில் கூடும் தென்னை விவசாயிகள்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Replace palm oil with coconut oil!-Chennai coconut farmers

தமிழ்நாட்டில் அதிகமாக விளையும் தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்கப்படுகிறது. ஆகவே உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யவும், தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் வலியுறுத்தி பல வருடங்களாகத் தேங்காய் உற்பத்தி விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில்தான் இதே கோரிக்கையை வலியுறுத்தி 16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் சென்னையில் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கீரமங்கலம் சுற்று வட்டார கிராம தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட நக்கீரர் தென்னை உற்பத்தி நிறுவனம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான செல்வராஜ் கூறும்போது, நக்கீரர் பண்ணை நட்டத்தில் இயங்கவில்லை. ரூ. 50 லட்சம் நிதி ஒரு தனி நபரிடம் உள்ளது. அதில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் உள்ளது என்றார். இந்த நிறுவனம் மீண்டும் செயல்படுவது சம்பந்தமாக ஆலோசிக்க வேண்டும் என்றனர் பல விவசாயிகள். தற்போது நக்கீரர் பண்ணை பற்றி ஆலோசிக்க வேண்டாம். சென்னை போராட்டம் முடிந்தவுடன் விரைவில் இதேபோல கூட்டம் ஏற்பாடு செய்து ஆலோசித்து மீண்டும் நிறுவனம் இயங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவானது.

Next Story

உரித்த தேங்காயை கிலோ ரூ. 50க்கு கொள்முதல் செய்! - விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Farmers are struggle by breaking coconuts buy peeled coconut Rs. 50 per kg

 

கஜா புயலின் தாக்கத்தால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் இழந்து நின்றனர். சில மாதங்கள் ஆனது இயல்பு நிலைக்குத் திரும்ப. பல மாதங்கள் ஆனது விழுந்த தென்னை மரங்களைத் தோப்புகளில் இருந்து வெட்டி அகற்ற. எஞ்சிய தென்னை மரங்களைப் பராமரிப்பதுடன் புதிய தென்னங் கன்றுகளை நட பொருளாதாரம் இல்லாமல் தவித்தனர் விவசாயிகள்.

 

நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், போர்க் கப்பலில் தென்னங் கன்றுகளைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று சொல்லிவிட்டுப் போனதோடு சரி. தமிழ்நாடு அரசு கொடுத்த நிவாரணம் போதவில்லை என்றாலும் வட்டிக்கு கடன் வாங்கி புதிய தென்னங் கன்றுகள் நட்டனர். இந்த நேரத்தில் சில மாதங்கள் தேங்காய், கொப்பரை, தேங்காய் மட்டை, கீற்று, தேங்காய் ஓடுகள் ஓரளவு விற்பனை ஆனதால் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாகத் தேங்காய் விலை படிப்படியாகக் குறைந்து தென்னை உபபொருட்களும் விலையில்லாமல் போனதால் விவசாயிகளின் நிலை பரிதாபமானது. சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ. 15 வரை விற்ற தேங்காய் தற்போது ரூ. 7, 8க்கு விற்பனை ஆகிறது.

 

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சாமி. நடராஜன் தலைமையில் பட்டுக்கோட்டை கடை வீதியில் தொடங்கி பேரணியாகச் சென்று, தேங்காய்க்கு உரிய விலை கொடு; உரித்த தேங்காய் கிலோ ரூ. 50க்கு அரசே கொள்முதல் செய்; ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய்யாக தேங்காய் எண்ணெய்களை வழங்கு; நெல், கரும்பு போல தேங்காய்க்கும் ஊக்கத் தொகை வழங்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.