
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுக் கொள்ளவை எட்டின. இதையடுத்து, இந்த அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ள நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு 1,16,029 கன அடியிலிருந்து 1,15,836 கன அடியாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று (17/07/2022) காலை 9.30 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 1,15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1.05 லட்சம் கனஅடியும், நீர் மினிநிலையம் வழியாக டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.