கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாகச் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கி ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.அதே சமயம் பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், பருப்பு வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தக்காளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்றைய விலையை விட கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்து கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.