ADVERTISEMENT

இந்த குற்றங்களுக்கு ஆபாச படங்கள்தான் காரணம்: ஐகோர்ட் வேதனை

01:41 PM Jun 22, 2019 | rajavel

ADVERTISEMENT

தவறான தொடர்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை அதிகரிப்புக்கு ஆபாச படங்களே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘திருச்செங்கோடு கல்லூரியில் படிக்கும் 19 வயதாகும் தனது இளைய மகளை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இதேபோன்ற வழக்கில் உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகரில் கள்ளக்காதல் காரணமாக 158 கொலைகள் நடந்துள்ளன. சென்னை தவிர தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற கள்ளக்காதல் விவகாரத்தால் 1301 கொலைகள் நடந்துள்ளன. கள்ளக்காதல் காரணமாக கொலை இல்லாமல் சென்னையில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 213 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை தவிர தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 621 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

அந்த பட்டியலைப் பார்த்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் நாங்கள் 18 கேள்விகள் கேட்டிருந்தோம். 2 கேள்விகளுக்கு மட்டும் பதில் தரப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் தவறான தொடர்பு காரணமாக நடைபெறும் கொலை மற்றும் குற்றங்கள் தொடர்பான செய்திகள் வருகின்றன. குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் இதுபோன்ற சமூக பிரச்னைகளை தீர்க்க அரசு யோசனை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்ததாக தெரியவந்தால் அதற்கான அடிப்படை காரணத்தை போலீசார் முதலில் ஆராய வேண்டும். அதன் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், செல்போன் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இன்றைய இளைய தலைமுறை உள்ளது என்றும், செல்போன்களில் வரும் ஆபாச படங்களை பார்த்து சமுதாயம் சீரழிகிறது. கள்ளக்காதல் மற்றும் குழந்தைகள் வன்கொடுமைக்கு காரணம் இணைதளங்களில் பரவும் ஆபாச படங்களே காரணம்.

எனவே, இந்த தவறான உறவால் கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடந்த ஆள் கடத்தல், தற்கொலை, தாக்குதல் ஆகியவை தொடர்பான புள்ளி விவரங்களை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு வரும் ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT