DMK MKSTALIN DAUGHTER HOME INCOME TAX RAID

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாளுடன் (04/04/2021) பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. இந்த நிலையில், அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மற்றொரு புறம் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வருமான வரித்துறையும் வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, வருமான வரித்துறைக்கு வரும் தகவலை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அரசியல் பிரமுகர்களின்வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுகதலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் வீட்டில் தற்பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், செந்தாமரைக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.