![Income Tax officials again conducted raids in Karur](http://image.nakkheeran.in/cdn/farfuture/lA0kohq-2HGBtLkwDy67nZ5r6wmFpxdKRvmhJxq_K5U/1687503095/sites/default/files/inline-images/1002_105.jpg)
கடந்த மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். எட்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் சில இடங்களில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சில இடங்களில் ஒத்துழைப்பு அழைக்காததால் சீல் வைக்கப்பட்ட இடங்களும் இருந்து வந்தன.
அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு இடங்களில் சோதனை மேற்கொண்டு, சோதனையானது அன்று இரவே முடிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற சோதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று கரூர்-ஈரோடு சாலையில் உள்ள அன்னை அப்பார்ட்மெண்டில் சக்தி மெஸ் கார்த்திக் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனைமேற் கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனையின் போது சீல் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டிற்கு வந்து வருமானவரித்துறை 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 20 மத்திய பாதுகாப்பு படை போலீசார் தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.