
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008ம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரித்துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், 2007-08, 2008-09ம் ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.
இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 2018ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தீர்ப்பாய கால தாமதத்திற்கு வருமானவரித் துறையே காரணம் என்பதால் வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், சூர்யா தாமதமாகத்தான் கணக்கைத் தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதாலும், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென வருமான வரி தரப்பில் வாதிடப்பட்டது.
வருமானவரித்துறையின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.