Income Tax Audit 1 crore forfeited

Advertisment

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 1 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பார்க் டவுன் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் மருந்து நிறுவனம் தொடர்பான 20 இடங்களில் கடந்த 18 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (21.10.2023) நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி மருந்து பொருட்கள் மற்றும் ரசாயன தயாரிப்பு ஆலை, கிடங்குகள், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் நான்காவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மருந்து குடோனிலும், ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்க் தெருவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பரிசோதனை கூடத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இரு நிறுவனங்கள், வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருவதால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.