op

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வரின் சொந்த ஊரான பெரியகுளத்தில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் இடைத்தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டு பேசினார்.

அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் , ‘’முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 நபர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. இதற்காக ஆளுநருக்கு இரண்டு முறை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம்.

Advertisment

வடகிழக்கு பருவமழையால் தற்போது உருவான புயலை சமாளிப்பதற்கு தமிழக அரசு சார்பாக அனைத்து உதவிகளையும் எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் 18 தொகுதிகளை மட்டும் புறக்கணிக்கவில்லை. 234 தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக நலத்திட்டங்களை செய்து வருகிறோம். 1996 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், 2004 ஆம் ஆண்டு தோற்றதற்கு காரணம் அவரின் செயல்பாடு சரியில்லை என்பதே. இரட்டை இலை சின்னம் வெற்றி சின்னமே. வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெறும். அரசியலில் அ.தி.மு.க விற்கு தி.மு.க தான் எதிரி. எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கியது சசிகலா கிடையாது சட்டமன்ற உறுப்பினர்களே.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமரை விட சிறந்தவர் ஸ்டாலின் என கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டாம் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை. தேர்தலுக்கு அ.தி.மு.க பணம் கொடுக்க உள்ளது என்ற தினகரன் குற்றச்சாட்டு பொய். தேர்தலின் போது மக்களுக்கு அ.தி.மு.க பணம் கொடுக்காது. பணம் பின்னர் தருவோம் என்றும் கூறமாட்டோம். தினகரன் ஆர்கே நகரில் 20 ரூபாயை கொடுத்ததால் மக்கள் வாங்குவதற்கே பயப்படுகின்றனர். இந்த வியூகத்தின் அடிப்படையிலேயே தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி பார்த்திபன் மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் ஜெ. பேரவை மாவட்ட செயலாளரும் ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.