incident in vellore...

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி 57 வது வார்டு கஸ்பா பொன்னி நகர் பகுதியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் எதிர்க்கட்சி துணைதலைவர் துரைமுருகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சமுதாயக்கூடம் கட்டித்தர நிதி ஒதுக்கினார் துரைமுருகன். அதன்படி சமுதாய கூடம் கட்டப்பட்டது. அது கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இந்த தேதி வரை திறக்கப்படாமல் உள்ளது.

Advertisment

Advertisment

சமுதாய கூடம் கட்டப்பட்டு பயன்படுத்தாததால் அதனை சுற்றி முள்புதர்கள் முளைத்துவிட்டன. இதனால் அந்த கட்டிடம் அருகே யாரும் செல்வதில்லை. இதனை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மது அருந்துதல், விலைமாதர்களை அழைத்துவந்து தனிமையில் உல்லாசமாக இருத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபற்றி அதிகாரிகள் வட்டாரமோ, சமுதாய கூடம் கட்டப்பட்டு உள்ள இடம் என்னுடைய இடம் என ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் மோகன் என்பவர், இதோபாருங்கள் என அந்த இடம் தன் மனைவி பெயரில் உள்ளதற்கான பத்திரத்தை இணைத்து புகார் மனு அனுப்பியுள்ளார். அதன்மீது இன்னும் எந்த முடிவும் உயர் அதிகாரிகள் எடுக்கவில்லை. அதனால் அந்த கட்டிடத்தை திறக்க அனுமதி வழங்காமல் இருக்கிறது என்கிறார்கள்.

இந்த சமுதாய கூடம் உடனடியாக திறக்க வேண்டும் சமூக விரோதிகளை அப்புறப்படுத்த வேண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அதனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுப்பற்றி எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்கிறார்கள்.