Skip to main content

குளிக்கும் ஆசையில் குளத்தில் மூழ்கி இரட்டையர்கள் பலி!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

incident in thoothukudi

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் பகுதியிலுள்ள புதியம்புத்தூரின் மேல அரசரடி ஏரியாவின் செல்வராஜ், பூரணம் தம்பதியருக்கு அருண்சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என்ற இரட்டைப் பிள்ளைகளோடு மகேஸ்வரி (14) என்ற மகளும் உள்ளார்.

 

தூத்துக்குடியின் கிழக்குக் கடற்கரை சாலையில் ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வந்த செல்வராஜ், குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். ஆனாலும் துவளாத மனைவி பூரணம், அந்த ஓட்டலை தானே நடத்தி வந்திருக்கிறார். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றாலும் வீட்டிலிருந்தாலும் அவர்களுக்கான உணவு தினமும் கடையிலிருந்து போவதே வழக்கம்.


தற்போது கரோனாத் தொற்று யுகம் என்பதால், பள்ளிமூடல் காரணமாக பிள்ளைகள் வீட்டிலிருந்திருக்கின்றனர். அதே சமயம் இரட்டையர்களான அருண்சுரேஷூம், அருண் வெங்கடேஷும் மதியம் கடையில் சாப்பிட்டுவிட்டு, தங்களது சகோதரிக்காக உணவு எடுத்துக்கொண்டு செல்வது வாடிக்கை. நேற்றுமுன்தினம் மதியம் வழக்கப்படி சகோதரர்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு தங்களின் சகோதரி மகேஸ்வரிக்கான உணவுப் பார்சல் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். வெகுநேரமாகியும் இரட்டையர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தாய் அனைவரும் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அதுகுறித்த புகாரும் காவல்நிலையத்தில் தரப்பட்டு போலீசாரின் தேடலும் துவங்கியிருக்கிறது.

 

incident in thoothukudi


இந்த நிலையில் கிராமம் அருகிலுள்ள குளத்தின் கரையில் உணவுப் பொட்டலம் கிடக்க, குளத்தின் தண்ணீரில் இரட்டைச் சிறுவர்களின் சடலமும் மிதப்பது தெரியவர, பதைபதைப்போடு சென்று பார்த்த தாயும் உறவினர்களும் கதறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரட்டையர்களின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார், அண்மையில் பெய்த மழை காரணமாக, குளத்திற்குத் தண்ணீர் வந்துள்ளது. சகோதரிக்குச் சாப்பாடு கொண்டு வந்தபோது குளத்தில் குளிப்பதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பரிதாபமாகத் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். என்றார்.

தூர்வாரப்படாத அந்த ஊரணி, பெய்த மழையால் முழுதும் நிரம்பியுள்ளது. சேரும் சகதியுமாகியிருக்கிறது. பாவம் இரட்டைச் சிறுவர்கள் குளிக்கும் ஆசையில், நீச்சல் தெரியாமல் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது அந்தப் பகுதியைக் கனத்த சோகத்தில் தள்ளியிருக்கிறது. எனினும், சம்பவம் காரணமாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி.ஜெயகுமார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.