INCIDENT IN THIRUPATHUR

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன். கடந்த வாரம் இவரது பாட்டி இறந்ததால் ஆலங்காயம் சாலையில் உள்ள ஊசித்தோப்பு பகுதியில் உள்ள கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் சென்றிருந்தார். திதி தரும் முன் குளிப்பதற்காக அங்கிருந்த கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழைநீரில் குளிக்கச் சென்றுள்ளார்.

குளத்தின் அருகே தனது செயற்கை காலை கரையில் கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார் தமிழ்ச்செல்வன். அப்போது அவர் ஆழமான பகுதியில் நீரில் சிக்கிக்கொண்டு மேலே வரமுடியாமல் சத்தமிட்டுக் கத்தியுள்ளார். உறவினர்கள் ஓடிவந்துள்ளனர். தமிழ்ச்செல்வனின் தந்தை ராஜா, நீரில் இறங்கி காப்பாற்றுவதற்குள் அவர் நீரில் மூழ்கி மாயமானார்.

இதனைத்தொடர்ந்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வன் உடலை தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியைக் கைவிட்டு மீண்டும் இரண்டாவது நாளாக தொடர்ந்தனர். வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர், நாட்றம்பள்ளி, வேலூர் உள்ளிட்ட 5 பகுதிகளில் இருந்துநீச்சல் பயிற்சிப் பெற்ற தீயணைப்பு மற்றும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 மணிநேரம் தேடலுக்குப் பின்னர் தமிழ்செல்வன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதுக்குறித்து, தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.