Skip to main content

அடைக்கலம் கேட்டுவந்த இளம்பெண்ணிடம் தகாதவாறு நடந்துகொண்ட பெண் ஆய்வாளர்!! தஞ்சையில் பரபரப்பு

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

ஆறு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்தவர்களை காவல்துறை ஆய்வாளரே தாக்கி, தாலியை கழற்றி வீசிய சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் நடராஜன் அவரது மகள் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அரியலூர் மாவட்டம் வடவாற்று பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  திருப்பனந்தாளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகவே படிக்கும்போது ஆறு ஆண்டுகளாக காதலித்திருக்கின்றனர். பிரபு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

 

INCIDENT IN THIRUPANANTHAL THANJAI


இந்தநிலையில் கரோனா ஊரடங்கு விவகாரத்தால் திருப்பூரில் இருந்த பிரபு வீட்டிற்கு வந்தார், அவரை சந்தித்த அனிதா, எனக்கு எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யுறாங்க, என்னை உடனே எங்காவது கூட்டிக்கொண்டு போய்விடு என கூற, பிரபுவும் அனிதாவும் கடந்த 19 ம் தேதி அணைக்கரை விள்ளியாண்டவர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோர்களும் திருமணத்தை ஏற்க மறுத்து, எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து கடந்த 21ம்தேதி இரவு காதல் தம்பதிகள் இருவரும் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் கவிதாவும், பெண் காவலரான ஜெயப்பிரியாவும் அனிதா மற்றும் பிரபுவை சமூக பெயரைக்கூறி திட்டியதோடு காலணி காலோடு எட்டி மிதித்து, ஆவேசத்தில் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை கழற்ற செல்லியுள்ளனர், அந்த பெண் மறுக்க, ஆய்வாளரே தாலியை கழட்டி வீசிவிட்டு, அந்த பெண்ணை அவரது பெற்றோர்களோடும், அந்த பையனை அடித்து விரட்டியும்  விட்டுள்ளனர்.
 

 nakkheeran app



இந்த தகவல் திருப்பனந்தாள் பகுதியில் உள்ள நீல புலிகள் இயக்கத் தலைவர் புரட்சிமணியின் காதுக்கு எட்ட, அவர் திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகனிடம் கூறி முறையிட்டார். அதிர்ந்து போன டிஎஸ்பி உடனே திருப்பனந்தாள் காவல்நிலையத்திற்கு விரைந்துவந்து, நடந்தவற்றை விசாரித்துவிட்டு, ஆய்வாளர் கவிதாவை, இருவரும் மேஜர், அவர்களை பிரிக்க நீங்கள் யார், இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற செயல்களை செய்தால் என்ன நடக்கும் என்றுகூட தெரியாதா, விடிவதற்குள் இருவரையும் நீதிபதியிடம் ஒன்றாக ஆஜர்படுத்தவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை பாயும் என வறுத்தெடுத்துவிட்டார்.  

இதையடுத்து பிரித்து அனுப்பியவர்களை தேடிப்பிடித்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி வீட்டில் இருவரையும் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது அனிதா, நான்  பிரபுவோடுதான் வாழ்வேன் என கூறியதால் அவரை கணவருடன் அனுப்பி வைத்துவிட்டனர்.

இதற்கிடையில் தனது மனைவியையும், தன்னையும் சமூக பெயரை சொல்லி தாக்கிய திருப்பனந்தாள் பெண்காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஜெயப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.