தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊசி பாசிமணி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவர் சமூக பெண் ஒருவரிடம் சீண்டலில்ஈடுபட்டு அத்துமீறியிருந்தார் ஒரு மப்டி போலீஸ்காரர். அதுசமயம் அவரைத் தட்டிக் கேட்ட அவரது கணவரையும் அவர் லத்தியால் தாக்கியிருக்கிறார்.
அதைக் கண்டு ஆவேசமடைந்த பயணிகளையும் பொதுமக்களையும் அவர் மிரட்ட, மக்களோ அவரைப் பிடித்து அங்குள்ள. புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குடிபோதையிலிருந்த அவரை போலீசார், விசாரித்த போது, அவரின் பெயர் ராமச்சந்திரன், மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீசாராகப் பணிபுரியும் அவர். பணிமுடிந்து கிராமம் திரும்புவர் பஸ்சுக்காக நின்ற கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
போலீஸ்காரர் என்பதால் அவரை எச்சரித்து நடவடிக்கையின்றி அனுப்பப்பட்டார். இந்த செய்தியை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. பத்திரிக்கையிலும் செய்தி வர, இதையறிந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதியரசர்கள் புகழேந்தி, கிருபாகரன் ஆகியோர் தாமதமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தவர்கள், பொறுப்பான பணியினை மேற்கொள்ளும் காவல்துறையினர் பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது குறித்து உள்துறை செயலாளர் டி.ஜி.பி. பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரிடம் அவசர அவசரமாகப் புகாரைப் பெற்ற டவுண் போலீசார் ராமசந்திரனைக் கைது செய்து சங்கரன்கோவில் நீதிமன்றனத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட நிதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதாரர் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார் சிங், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்து வழக்கில் இருந்து விலகினார். இந்நிலையில் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (15.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது. இதனை வேடிக்கை பார்க்க முடியாது. இதுபோன்ற அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கும்போது இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக் கொள்ள முடியாது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.
நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர். ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.