Skip to main content

ஆலய விழாவுக்கு கொண்டு வரப்பட்ட யானை திடீர் உயிரிழப்பு!!! பக்தர்கள் கண்ணீர்...

Published on 19/10/2020 | Edited on 20/10/2020
incident in thenkasi

 

 

தென்காசி மாவட்டத்தின் பாப்பாக்குடி சமீபம் உள்ள முக்கூடல் முத்துமாலையம்மன் ஆலயத்தின் தசரா விழா நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த விழா நிகழ்ச்சியின் பொருட்டு, சப்பரப் பவனியின் விசேஷத்திற்காக நேற்று முன்தினம் இரவு ரவணசமுத்திலிருக்கும் தாவூர் மீரான் என்பவர் தன்னுடைய 54 வயதான லட்சுமி என்ற பெண் யானையை அழைத்து வந்திருக்கிறார். இந்த யானையைப் பராமரித்து வரும் தாவூத் மீரான் அந்த பகுதிகளின் கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்வது வழக்கமானது தான்.

 

மறுநாள் முக்கூடலின் தாமிபரணியாற்றில் யானையைக் குளிப்பாட்டிய தாவூத், அதற்கு உணவு அளித்துவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார். அன்றைய நடு இரவின்போது யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே உடனே கால் நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போகவே அந்த லட்சுமியின் உயிர் நள்ளிரவு பிரிந்தது. அதனைத் தொடர்ந்து முக்கூடல் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை வன கால்நடை மருத்துவர் மனோகரன், மற்றும் ஆலங்குளம் கால்நடை உதவி இயக்குனர் ஜான்சுபாஷ் முக்கூடல் கால் நடைமருத்துவர் சிவமுத்து ஆகியோர் இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் தாமிரபரணியின் ஆற்றங்கரைப் பக்கம் யானையின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

 

இறந்த யானையின் உடற்கூறு ஆய்வுகள் வெளியிடப்படாவிட்டாலும் அதற்கு வலிப்பு நோய் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் காரணமா என்பது உடற்கூறு ஆய்வில்தான் தெரியும் என்கிறார்கள். கேரளாவின் மலப்புரம் காட்டில் கடந்தசில மாதங்களுக்கு முன் அன்னாசிப்பழத்தில் வைத்த வெடிகுண்டைக் கடித்து தின்றதில் வாய் சிதறி, ஒருவாரம் வதைபட்டுச் செத்து மடிந்தது கர்ப்பிணி யானை.

 

கடந்த வாரம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிப் பொட்டல் பகுதியில் வாய்ப் புண்ணோடு வைத்தியம் கிடைக்காமல் ஒருவாரமாக வேதனையில் அலறிக் கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணி யானை வனத்துறையினரின் பாராமுகத்தால் மரணமடைந்தது. ‘தெய்வத்திற்கு ஒப்பான யானைகள் அனாதைகளாக மடிவது லோகத்திற்கு விசேஷமல்ல என்பது கடவுள்களின் தேசத்தில் உறுதியாக நம்பப்படுபவை.’

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.