Skip to main content

ஒன்றரை லட்சத்துக்கு 8 லட்ச ரூபாய் கந்து வட்டி!-தலைமறைவான சிவகாசி வங்கி ஊழியரின் மோசடி நெட்வொர்க்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

sivakasi


சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில், கந்துவட்டி கொலை மிரட்டல் வழக்கொன்று பதிவாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு –

 

வட்டியோ வட்டி! வட்டி போடும் குட்டி!


சிவகாசியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், உணவுப் பொருள் நிறுவனம் ஒன்றின் விநியோகஸ்தராக இருந்து, கடைகளுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளார். சிவகாசி ஈக்விடாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள அவரிடம், அங்கு உதவி மேலாளராகப் பணிபுரிந்த விளாம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், ‘அவசரத் தேவைக்கு நான் பணம் தருகிறேன்’ என்று அறிமுகமாகி, 2019, பிப்ரவரி மாதம், வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளார். ரூ.50,000 கடன் தொகைக்கு, முதலிலேயே ரூ.13,000 பிடித்துக்கொண்டு ரூ37,000 கொடுத்துள்ளார். அந்தத் தொகையை வாரம் ரூ.5,000 வீதம் 10 வாரங்களில் ரூ.50,000-ஆக, தினேஷ் கொடுத்துள்ளார். இன்னொரு விதமாக பாலமுருகன், ரூ.50,000-க்கு, ரூ.5,000 பிடித்துக்கொண்டு, முதலில் ரூ.45,000 கடன் கொடுத்திருக்கிறார். இதில் அசலையும் சேர்த்துத்தர வேண்டியதில்லை. ஆனால், 15 நாட்களுக்கு ஒருமுறை, வட்டியாக ரூ.5,000 தந்துவிட வேண்டும். அப்படி வட்டி கொடுக்காதபோது, ரூ.5,000 வட்டிக்கு அபராதமாக நாளொன்றுக்கு ரூ500 கொடுத்துவிட வேண்டும்.

தினேஷை உணவுப் பொருள் விநியோகஸ்தர் ஆக்கிய நிறுவனத்தின் கடுமையான நெருக்கடியால், தொடர்ந்து பாலமுருகனிடம் ரூ.1,42,000 வரை அவர் கடன் வாங்கியிருக்கிறார். வட்டி கட்ட முடியாமல் அபராதமும் அடிக்கடி செலுத்தி வந்திருக்கிறார். இந்த அளவுக்கு வட்டி கட்டி தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், அந்த உணவுப் பொருள் நிறுவனம், சப்ளையை முற்றிலுமாக நிறுத்திவிட, நஷ்டம் ஏற்பட்டு, தொழில் என்பதே இல்லாத நிலைக்கு தினேஷ் தள்ளப்பட்டுள்ளார். அதனால், பாலமுருகனுக்கு  வட்டியோ, அசலோ அவர் கொடுக்கவில்லை.

வட்டிப் பணமெல்லாம் பினாமிகளின் வங்கிக் கணக்குகளில்!

 

sivakasi


இந்த நிலையில்தான், தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன், ‘அபராத தொகையே ஒண்ணே கால் லட்சத்தை தாண்டி விட்டது’ என்று வீடு தேடி வந்து தகராறு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பாலமுருகனிடம் கடந்த 20 மாதங்களில் கடனாகப் பெற்ற ரூ.1,42,000-க்கு வட்டியும் அபராதமுமாக தான் செலுத்திய தொகை ரூ.8,06,000 என, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார். கடன் வாங்கிய பணத்திற்கு ஈடாக, தொகை எழுதப்படாத,  தான் கையெழுத்திட்ட இரண்டு புரோ நோட்டுகளையும், தொகை நிரப்பப்படாத கையெழுத்திட்ட பேங்க் ஆஃப் இந்தியாவின் 10 காசோலைகளையும், தன்னிடமிருந்து  பாலமுருகன் பெற்றுக் கொண்டதாக, புகாரில் தினேஷ் குறிப்பிட்டுள்ளார். பாலமுருகனின் பினாமி பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகள் மூன்றில் ’நெட் பேங்கிங்’ மூலம் வட்டி செலுத்தியது உள்ளிட்ட ஆதாரங்களையும் தந்துள்ளார்.

 

sivakasi


வட்டிக்கு விடுவது மிரட்டலான பறவையின் பணமா?  

சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷை போலவே, பாலமுருகனிடம் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி, விருதுநகர் மாவட்டத்தில் மாட்டிக் கொண்டவர்கள் பலர் உள்ளதாக, தகவல் கிடைத்திருக்கிறது.  மில் முதலாளிகள் போன்ற பெரிய செல்வந்தர்களுக்கு, ரூ.1 கோடி வரை கடன் கொடுத்து, நாளொன்றுக்கு 1 சதவீத வட்டியாக ரூ.1 லட்சம் வரை பெற்று வந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஈக்விடாஸ் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே, வாடிக்கையாளர்களிடமும், வெளி நபர்களிடமும் இந்த அளவுக்கு, வட்டிக்கு கடன் கொடுத்தது தெரியவர, தற்போது அவரை வேலையிலிருந்து வங்கி நிர்வாகம் நீக்கிவிட்டது. இவ்வளவு பணம் பாலமுருகனுக்கு எங்கிருந்து வருகிறது? அ.ம.மு.க மேடைகளில் அடிக்கடி தென்படும் பாலமுருகன், கோடானு கோடிகளெல்லாம் அந்த அரசியல் பறவையிடமிருந்து வருவதாக, போதையில் உளறுவதும், ‘எங்கம்மா.. எங்கம்மா..’ என்று பிதற்றுவதும் உண்டாம். பாலமுருகனுக்குப் பின்னால், பலம் வாய்ந்த கந்துவட்டி கும்பலின் நெட்வொர்க் இருப்பதாகச் சொல்கின்றனர். தமிழகம் முழுவதும், கந்துவட்டி சுற்றுக்கு வரும் பறவையின் பணம்தான், விருதுநகர் மாவட்டத்திலும் பாலமுருகன் போன்ற கேடிகள் மூலம் இறைக்கப்படுகிறதாம்.

 

Ad


வட்டி கணக்கு டைரி எங்கே?

 

sivakasi


பாலமுருகன், கந்துவட்டி வசூலிக்கும் அவரது மாப்பிள்ளை ஜே.பி. மற்றும் பினாமிகளின் ஃபோன் தொடர்புகளை ஆராய்ந்தாலே, கந்துவட்டி கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும்  பிடித்துவிடலாம். கடன் வாங்கியவர்களிடமிருந்து பெறும் வார வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி, கந்துவட்டி கணக்குகளை, நாள்தோறும் தவறாமல் டைரியில் எழுதுவது பாலமுருகனின் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த டைரியைக் கைப்பற்றினால், விருதுநகர் மாவட்டத்தில், பாலமுருகனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பட்டியலும் கிடைத்துவிடும் என்கிறது, காவல்துறை வட்டாரம்.

தன் மீது கந்துவட்டி, கொலை மிரட்டல் வழக்குப் பதிவாகி, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதும், பாலமுருகன் தலைமறைவாகிவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

பாகிஸ்தான் தேர்தல்: தவறை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்த அதிகாரியால் பரபரப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Excited by the official's information at Pakistan Election Fraud?

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து முடிந்த பிறகு, புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஸ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி நடந்ததாக இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழ்நிலையில், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகத் தேர்தல் அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷ்னரான லியாகத் அலி சத்தா, இன்று (17-02-24) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர். நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

மேலும், இந்த செயலில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக ஈடுபட்டார்கள். நாட்டின் முதுகில் குத்துவது என்னை தூங்க விடாது. நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்காக எந்த தவறான செயல்களிலும் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிகாரியின் இந்த தகவலால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.