Skip to main content

கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன் – தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள்!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

incident in sengam

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான மணிகண்டன். இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஷோபானா என்பவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள். நான்காவதாகக் கர்ப்பமாகி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருமாம். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைப்பார்களாம். இந்நிலையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி இரவு கணவன் – மனைவி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. மனைவியைப் போதையில் அடித்து உதைக்க, வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தள்ளார். அக்கம் பக்கத்தினர் மற்றும் ஷோபானாவின் உறவிர்கள், கீழே விழுந்து கிடந்த ஷோபனாவை, அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டார் எனத் தகவல் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் ஜூலை 10ஆம் தேதி காலை அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்து உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மணிகண்டனுக்கு வேண்டப்பட்டவர்கள் சிலர், வேலை செய்யும் போது மயங்கி விழுந்து இறந்தார் என்கிற ரீதியில் தகவலைப் பரப்பியுள்ளனர். இது தீவிரமாக பரவியுள்ளது. கணவன் அடித்து மனைவி இறந்தது அக்கம் பக்கம் உள்ள அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க அவரைத் தப்பிக்க வைக்க நினைப்பது ஏன் எனக்கேட்டு ஷோபானாவின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர். வழக்குப் பதிவு செய்துவிட்டோம், நடவடிக்கை எடுக்கிறோம் எனச் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர் போலீசார்.

ஜூலை 11ஆம் தேதி காலை வரை கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரைக் கைது செய்யாததால் ஷோபனாவின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். இன்று செங்கத்தில் போராட்டம் செய்தனர். அப்போது, அங்கிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. நூற்றுக்கும் அதிகமான போலீஸார் அங்கே குவிக்கப்பட்டு போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரைக் கைது செய்தனர். அதன் பிறகு பெண் வீட்டார் கர்ப்பிணியின் உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.