Skip to main content

சவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

incident in salem... police investigation

 

சேலம் அருகே, சவரத்தொழிலாளி கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை, மகனை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி முனியப்பன் கோயில் காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மயில்சாமி (33), இவர் சவரத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதற்கிடையே, பிப். 25ம் தேதி மதியம், மயில்சாமியின் வீடு அருகே 33 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. அவரை மர்ம நபர்கள் தலையில் தாக்கியதில் ரத்தம் அதிகளவில் வெளியேறி இருந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர், ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மகாலிங்கம் (32) என்பது தெரியவந்தது. சவரத் தொழிலாளியான அவர், குடிபோதையில் இருந்தபோது கட்டையால் அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

 

தொடர் விசாரணையில், மயில்சாமிக்கும், மகாலிங்கத்திற்கும் நீண்ட காலமாகப் பழக்கம் இருந்துள்ளது. அதன்பேரில், சம்பவத்தன்று மகாலிங்கம் பூலாவரி முனியப்பன் காடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, பிப். 25ம் தேதி காலையில் இருந்து திடீரென்று மயில்சாமியும், அவருடைய தந்தை தங்கவேலுவும் மாயமாகிவிட்டனர். இதனால் அவர்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது. உள்ளூரில் ஓரிடத்தில் தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரையும் காவல்துறையினர் பிடித்து  விசாரித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது