Skip to main content

சேலத்தில் சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை; திகில் கிளப்பும் கொலையாளி யார்? காவல்துறை விசாரணை!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

சேலத்தில் கடந்த மூன்று நாள்களில், சாலைகளில் கேட்பாரின்றி சுற்றித்திரியும் முதியவர்கள், பிச்சைக்காரர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே மாதிரியான மூன்று கொலைகளையும் செய்தது ஒரே ஆள்தானா? கொலையாளிகளின் பின்னணி என்ன? என்று தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. பழைய பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதாலும், வாடகை செலுத்தாததால் வணிக வளாகத்தில் பல கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாலும், அப்பகுதியில் ஆள்நடமாட்டம் குறைந்து உள்ளது. இரவு நேரத்தில், வணிக வளாகத்தை சட்ட விரோத கும்பல் மது அருந்தும் திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

 

incident in salem... police investigation

 

இந்நிலையில், வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையின் வாசலில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது குறித்து சேலம் மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தின் அருகில் ரத்தம் தோய்ந்த நிலையில் ஒரு கல் கிடந்தது. மர்ம நபர்கள், அந்த முதியவரை கல்லால் அடித்துக் கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

உடற்கூறு ஆய்வுக்காக சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொலையுண்ட நபர், சேலம் பொன்னம்மாபேட்டை சடகோபன் தெருவைச் சேர்ந்த அங்கமுத்து (85) என்பது தெரிய வந்தது. பழ வியாபாரியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அங்கமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால் மகன்கள் திட்டுவார்கள் என்பதால், மது குடித்திருக்கும் நாள்களில் பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்திலேயே படுத்துக் கொள்வாராம். திங்கள்கிழமை (பிப். 3) இரவும் அவர் மதுகுடித்து இருந்ததால், போதை தலைக்கேறிய நிலையில் அவர் வணிக வளாக கடை வாசலிலேயே படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (இன்று, பிப். 4) அதிகாலையில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

வணிக வளாகம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

incident in salem... police investigation

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் சூரமங்கலத்தில் திங்கள்கிழமை (பிப். 3) இரவு, பிச்சைக்காரர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். சம்பவ இடம் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர், அந்த பிச்சைக்காரர் வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிச்சைக்காரரை அந்த மர்ம நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இதுமட்டுமின்றி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடைய அருகில் இருந்தும் காதில் ரத்தம் வழிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று (பிப். 2) 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆரம்பத்தில் அவர் வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உடற்கூறு ஆய்வில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களிலும் கேட்பாரற்று சாலையோரம் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், முதியவர்களை குறி வைத்து கொலை செய்யப்பட்டிருப்பதும், மூன்று சம்பவங்களிலும் முக்கிய ஆயுதமாக கல் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவற்றின் மூலம், இந்த மூன்று கொலைகளையும் ஒரே ஆள் செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.

எனினும் சூரமங்கலம் பகுதியில் பிச்சைக்காரர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மட்டுமே இப்போதைக்கு சந்தேக நபர் குறித்த கேமரா பதிவு காட்சிகள் கிடைத்துள்ளன. மற்ற இரு கொலைகளையும் செய்ததும், சூரமங்கலம் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர்தானா அல்லது வேறு வேறு நபர்களா என்பதையும் காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சேலம் மாநகரில், சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.