Skip to main content

சேலத்தில் பல கோடி ரூபாய் சுருட்டிய மோசடி ஆசாமிக்கு குண்டாஸ்!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

சேலத்தில், நூறு நாட்களில் முதலீட்டுப் பணத்தை இரட்டிப்பு மடங்காக வழங்குவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆசாமியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிவண்ணன் (38). இவருடைய மனைவி இந்துமதி. இவர்கள் இருவரும் சேர்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆர்எம்வி குரூப் ஆப் கம்பனீஸ் என்ற பெயரில் வணிக நிறுவனம் நடத்தி வந்தனர்.

 

incident in salem.. police arrest


இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகையை 100 நாள்களில் இரட்டிப்பு மடங்காக திருப்பி தரப்படும் என்றும், ஊறுகாய், மசாலா பொருள்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு பகுதிவாரியாக விநியோக உரிமை வழங்கப்படும் என்றும், வெளிநாடுகளுக்கு மேற்படி பொருள்களை விற்பதற்கான ஆர்டர்கள் பெற்றுத்தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர்.

அவர்களின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பிய பலர், பல கோடி ரூபாய்களை முதலீடாக கொட்டினர். ஒருகட்டத்தில், முதலீட்டுப் பணத்தை சுருட்டிக்கொண்டு கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் 63 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் கணவன், மனைவி இருவரையும் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 19.10.2019ம் தேதி கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மணிவண்ணன், சேலம் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி மகளிர் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மணிவண்ணன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி மணிவண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் காவல்துறையினர் நேரில் சார்வு செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.