incident in salem panamarathupatti

சேலம் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த இளம்பெண், தனது மூன்று வயது மகனுக்குப் பூச்சி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகன் முத்துக்குமார் (25). வெல்டிங் தொழிலாளி.

Advertisment

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புகேரளமாநிலத்தில் வேலை செய்தார்.அப்போது அங்கு ஸ்டெபியா (24) என்ற இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு காதல் மனைவியுடன் முத்துக்குமார் சொந்த ஊருக்கே வந்துவிட்டார். இவர்களுக்கு 3 வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஸ்டெபியாவுக்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. திடீர் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கோபப்படும் அவர், அடிக்கடி மாமியார், கணவர் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அனைவரும் நிம்மதி இழந்து இருந்தனர்.

Advertisment

இந்நிலையில், புதன்கிழமை (மார்ச் 24) இரவு ஸ்டெபியா, கணவரின் தம்பி ஜெயக்குமார் (10) என்ற சிறுவனை திடீரென்று தாக்கியுள்ளார். இரவு வீடு திரும்பிய முத்துக்குமாரிடம் இதுகுறித்து ஜெயக்குமார் கூற, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவருடன் ஏற்பட்ட கோபத்தால் இரவு சாப்பிடாமலேயே ஸ்டெபியா தூங்கச் சென்றுவிட்டார். திடீரென்று நள்ளிரவில் எழுந்த முத்துக்குமார், படுக்கையில் மனைவியையும், குழந்தையையும் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு அவர்களைத் தேடிச்சென்றார்.

வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மகன் அஜித், ஒரு பாறையில் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. அங்கிருந்து சிறிது தொலைவில் ஸ்டெபியாவும் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலங்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த ஸ்டெபியா தற்கொலை செய்ய முடிவெடுத்ததும், வீட்டில் பூச்செடிக்குத் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து முதலில் குழந்தைக்குக் கொடுத்து கொன்றுவிட்டு, பிறகு அவரும் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

திருமணம் ஆன நான்கு ஆண்டில் இளம்பெண் இறந்திருப்பதால் சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கேரளாவில் உள்ள ஸ்டெபியாவின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தையைக் கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கம்மாளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.