SALEM

சேலம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை நண்பர்களே கூட்டு சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் சேலம் & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் ஞாயிற்றுக் கிழமை (நவ. 29) சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். மாவட்ட காவல்துறை எஸ்.பி தீபாகனிகர் மற்றும் காவல்துறையினர் சடலம் கிடந்த இடத்துக்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதையடுத்து, வாழப்பாடி காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். சடலமாகக் கிடந்தவர், பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சக்தி(25) என்பது தெரியவந்தது. இவருடைய அக்காள் சொந்தமாக நடத்தி வரும் பால் ஏஜென்சியில், கடந்த 2 ஆண்டாக சக்தி வேலை செய்து வந்தார். நவ. 28 -ஆம் தேதி வழக்கம்போல் பால் ஊற்றிவிட்டு, வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே கிளம்பியுள்ளார். காளியம்மன் நகரைச் சேர்ந்த திருமலை(20), திலீப்(18) ஆகியோருடன் சேர்ந்து சக்தி மது குடித்துள்ளார்.

SALEM

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த திருமலை, திடீரென்று சக்தியை தாக்கியுள்ளார். நிலைகுலைந்து கீழே சரிந்த அவர் மீது திலீப், திருமலை ஆகிய இருவரும் கல்லை தூக்கிப்போட்டுள்ளார்.

இதனால், அவர் மயக்கம் அடைந்தார். அப்போதும் ஆத்திரம் தணியாத நண்பர்கள் இருவரும் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து, சக்தியை உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருமலை, திலீப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். குடிபோதை தகராறில் நண்பர்களே, இன்னொரு நண்பரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.