தர்மபுரி அருகே, பள்ளிக்குப் பயிற்சி ஏடு வாங்கவந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள இண்டூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கூலிக்கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பள்ளியில் பயிற்சிப் புத்தகம் வழங்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் அந்தச் சிறுமி, ஏப். 21ம் தேதி பள்ளிக்குச் சென்றிருந்தார். அதே பள்ளியில் கணித பாட ஆசிரியராகப் பணியாற்றி வரும் மல்லியம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் (43) என்பவர், மாணவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து மாணவி, பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் லதா, போக்சோ சிறப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் கோவிந்தனை கைது செய்தார். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வி ஆசிரியர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.